சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் (Rope Car) திட்டத்தை செயல்படுவத்துற்கான பணி விரைவு பெற்றுள்ளது. சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை இந்த திட்டத்தை செயல்படுவத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்கும் திட்டம் தொடங்கப்படலாம் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் பொதுமக்களை கவரும் வகையில் 'ரோப் கார்' திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. கடந்த 2022 அக்டோபர் மாதம் 104வது வார்டு கவுன்சிலர் டிவி செம்மொழி தான் இந்த திட்டத்தை முன்வைத்தார்.
''சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 5 கிமீ தூரத்திற்கு 'ரோப் கார்' திட்டத்தை கொண்டு வர வேண்டும். இதன்மூலம் சென்னை மெரினாவின் அழகை வான்வெளியில் இருந்து பொதுமக்களால் எளிதில் ரசிக்க முடியும்'' என்றார்.
இதையடுத்து சென்னை மெரினாவில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான மண் பரிசோதனை, பொருளாதார பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க 2024ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது. கடந்த 2026-27 ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, தனியார் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் சுமார் 30 அடி ஆழத்திற்கு துளையிட்டு மண் பரிசோதனை நடத்தியது. இந்த பணிகளுக்கு கலங்கரை விளக்க பகுதிக்கு அருகே வசிக்கும் மீனவர்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பின்னர் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டன.
இதுபற்றி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், ''இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி சாத்தியக்கூறுகளை நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம். பெரும் முதலீடு தேவைப்படும் திட்டம் என்பதால் இந்த ஆண்டின் இறுதிக்குள் இது தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டப்பணிகள் தொடங்குவதற்கு முன்பு கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியும் பெறப்படும். சுற்றுச்சூழல், கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெற்ற பிறகே திட்டம் தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்கும் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இருப்பினும் இந்த திட்டத்துக்கான நிதி தொடர்பாக சில சவால்கள் எழுந்துள்ளன. விரிவான திட்ட அறிக்கையில் (DPR) செலவு சார்ந்த சவால்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாற்று வழிகளை ஆராய மாநகராட்சி முடிவெடுத்துள்ளதாக சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுபற்றி அவர், "நேரடியாக கடற்கரை மணலில் ரோப் கார் வழித்தடம் அமைப்பதற்கு பதிலாக, அதற்கு அருகிலுள்ள சர்வீஸ் சாலையையொட்டி கட்டுமானங்களை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை மாநகராட்சி மறுபரிசீலனை செய்து வருகிறது'' என்றார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜிஎஸ் சமீரன் கூறுகையில், 'இந்த திட்டம் அரசு - தனியார் (PPP) பங்களிப்பின் கீழ் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் முழுமையாக ஆய்வுகளை முடிக்க வேண்டி உள்ளது. வரவிருக்கும் நாட்களில் அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனைகள் நடத்தி முடிவெடுக்கப்படும்'' என்றார்.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் வான்வெளியில் பறந்து கொண்டே சென்னை மெரினா கடற்கரையின் அழகை ரசிக்கலாம். இருப்பினும் மீனவர்களின் ஒரு தரப்பினர் இந்த திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கே. பாரதி கூறுகையில, ''உள்ளூர் மக்களிடம் முறையான அனுமதி பெறாமல் மண் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் முன்னோக்கி எடுத்து செல்வதற்கு முன்பு தற்போதைய அரசு அந்த பகுதி மக்களிடம் கலந்து பேச வேண்டும். இதனை அரசு செய்யும் என்று நம்புகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications