சென்னை அடுத்த இரு நாட்களுக்கு 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.. தகிக்கும் தலைநகர்.. வெதர் ரிப்போர்ட்
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் வெப்பநிலை உயரக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்றும் நாளையும் வெப்பநிலை உயரும். தமிழகம், புதுவையில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை உயரும். தென்னிந்திய கடற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று 5 மாவட்டங்களில் மழைபெய்யும்.
நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் 2 நாட்களுக்கு வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

17 ஆம் தேதியும் 18 ஆம் தேதியும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக வெப்ப அழுத்தம் ஏற்படலாம். அதனால் அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 38- 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39- 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
இன்றைய தினம் மத்திய வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என அறிக்கையில் கூறியிருக்கிறது.

சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: வங்க கடலில் கடந்த வாரம் உருவான மோச்சா புயல், கடந்த 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் கரையை கடந்தது.
இதனால் சென்னை கடல் பகுதிகளில் அந்த 2 நாட்கள் கடல் காற்று இல்லாமல் போய்விட்டது. கடந்த 15-ஆம் தேதி (நேற்று முன்தினம்) கடல் காற்று பிற்பகல் 12.45 மணிக்கு தான் சற்று வீசத்தொடங்கியது. இன்று (நேற்று) பிற்பகல் 1.15 மணிக்கு பிறகுதான் வீச ஆரம்பித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்பட்டு இருக்கிறது. இனி வரக்கூடிய 2 நாட்களுக்கும் இப்படித்தான் இருக்கும். கடல் காற்று ஓரளவுக்கு வீசத்தொடங்கியதும், வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கெனவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் மக்கள் பழச்சாறு கடைகளையும் ஐஸ்கிரீம் கடைகளையும் நாடி செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications