சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்!
சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் மிக முக்கியப் பங்கு வகித்து வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), தற்போது தனது இரண்டாம் கட்ட (Phase 2) திட்டப் பணிகளை துவங்கியுள்ளது.
இந்த இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் அமையவுள்ள 11 முக்கியச் சுரங்க மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளுக்கு (Entry Exit) மேலே, பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டுக் (Integrated Property Development) திட்டத்தை வடிவமைப்பதற்கான புதிய டெண்டர்களை சிஎம்ஆர்எல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

என்ன செய்யப் போகிறது மெட்ரோ நிர்வாகம்?
சென்னையில் முக்கிய மெட்ரோ வழித்தடத்தில் இருக்கும் சுரங்க மெட்ரோ நிலையங்கள் அதாவது Underground Metro Stations நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் தற்போது வெற்று காலி இடங்களாகவே உள்ளது. இதற்கு பதிலாக, அந்த இடத்தில் பிரம்மாண்டமான ரீடைல் விற்பனை நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் நவீன அலுவலகக் கட்டிடங்களை கட்டவே CMRL இந்த மாஸ்டர் பிளான் தீட்டியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் பெரும்பாலான கட்டிடங்கள் 3 மாடிகள் முதல் 10 மாடிகள் வரையிலான பிரம்மாண்ட அடுக்குமாடி வளாகங்களாக அமையவுள்ளன. சுரங்க ரயில் நிலையத்திலிருந்து மேலே ஏறி வரும் பயணிகள், நேரடியாக இந்த வணிக வளாகங்களுக்குள் செல்லும் வகையில் இவை மிகவும் நவீனத் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்து வடிவமைக்கப்படவுள்ளன.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் தினசரிப் பயணத்தின் போதே அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
நந்தனம் முதல் கச்சேரி சாலை வரை
சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டத்தில் உள்ள காரிடர் 4-ன் (Corridor 4) கீழ் வரவிருக்கும் முக்கியச் சுரங்க மெட்ரோ நிலையங்களில் இந்த ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டுத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட் கிளப் மற்றும் நந்தனம் ஆகிய 5 முக்கியச் சுரங்க மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளுக்கு மேலே இந்த வணிகக் கட்டிடங்களை விரிவாக வடிவமைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
சேத்துப்பட்டு முதல் அடையாறு வரை
அதேபோன்று, சென்னை மெட்ரோவின் காரிடார் 3-ன் (Corridor 3) கீழ் வரும் மிக நீளமான மற்றும் பரபரப்பான பகுதிகளிலும் இந்த சொத்து மேம்பாட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்தத் காரிடாரில் உள்ள சேத்துப்பட்டு, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை (Royapettah GH), ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், டாக்டர் ஆர்.கே. சாலை மற்றும் அடையாறு பணிமனை (Adyar Depot) ஆகிய 6 சுரங்க மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளுக்கு மேலே இந்த ஒருங்கிணைந்த வணிக உள்கட்டமைப்புகள் அமையவுள்ளன.
சென்னையின் மையப்பகுதிகளையும், தென் சென்னைப் பகுதிகளையும் இணைக்கும் இந்த நிலையங்களில் வரப்போகும் 10 மாடி வரையிலான கட்டிடங்கள், மெட்ரோ பயணிகளுக்குப் புதியதொரு பொழுதுபோக்கு மற்றும் நவீன ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும்.












Click it and Unblock the Notifications