சென்னை மக்களுக்கு செம அறிவிப்பு.. இணைக்கப்படும் மெட்ரோ + மின்சார ரயில்! இனி ஈஸியா டிராவல் பண்ணலாம்
சென்னை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட பறக்கும் ரயில் சேவை விரைவில் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வளர்ந்து வரும் நகரமயமாக்கல் சென்னையை நோக்கி ஏராளமான மக்களை நகர்த்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் நகரத்தின் மையத்தில் தங்குவதற்கு இடம் இருக்காது என்பதால் புறநகர் பகுதியிலிருந்து தங்கி தினமும் நகரின் மையத்திற்கு வந்து வேலை பார்த்துவிட்டு போகின்றனர். இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவே புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டன.

கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, சென்னை கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, கடற்கரை-அரக்கோணம், சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்-சூலூர்பேட்டை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை கடற்கரை-வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில்கள் பறக்கும் ரயில் சேவையாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பறக்கும் ரயில் சேவை விரைவில் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது சென்னை மாநகரப் பகுதிகளில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பறக்கும் ரயில் சேவையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆய்வு செய்து மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டு, மெட்ரோ ரயில் சேவையை பறக்கும் ரயில் சேவையுடன் இணைக்கும் வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததும், பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்தி மெட்ரோ ரயில் சேவைக்கு இணையான சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் டெண்டர் விட்டு பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னை மக்களின் பயண நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் இந்த திட்டத்திற்கு வரவேற்பளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications