சென்னை மயிலாப்பூரில் சித்திரைக் குளம் நிரம்பியது.. வெள்ளக்காடான தெருக்கள்
சென்னை: சென்னை மயிலாப்பூரில் சித்திரைக் குளம் நிரம்பி உபரி நீர் தெருக்களுக்குள் பாய்கிறது, இதனை குடும்பம் குடும்பமாக வந்து மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். இது ஒருபுறம் எனில் மந்தவெளியில், சாலையில் திடீர் ராட்சத பள்ளம் உருவானது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் குளம், சித்திரைக் குளம், விருபாக்சீஸ்வரர் கோயில் குளம் மற்றும் மாதவப்பெருமாள் கோயில் குளம் ஆகிய நான்கு குளங்கள் உள்ளன.
சமீபத்திய கனமழையால் இந்த நான்கு குளங்களுக்கும் நீர் வரத்து அதிகம் இருந்தது. இரண்டாவது பெரிய குளமான சித்திரை குளம் அருகில் உள்ள விஷ்ணு கோயிலுக்கு உரியதாகும்.

சித்திரைக்குளம்
கடந்த சில தினங்களாக வேகமாக நிரம்பி வந்த சித்திரைக் குளம் இன்று காலை முழுமையாக நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் உபரிநீர் அருகிலுள்ள சித்திரைக்குளம் வடக்குத்தெரு, கேசவ பெருமாள் கோயில் தெரு ,சோலையப்பன் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்குள் புகுந்து வெள்ளக்காடாக ஆகியது.

வேடிக்கை
சித்திரைக் குளம் நிறைந்து உபரிநீர் நாலாப் பக்கம் வெளியேறியதை கேள்விப்பட்ட பொதுமக்கள் இன்று காலை முதல் குடும்பம் குடும்பமாக வந்து வேடிக்கை பார்த்தனர். நீண்ட காலத்திற்குப் பிறகு கடந்த 2015-ம் வருடத்தில் பெய்த பெருமழையில் இக்குளம் நிரம்பியது. ஆனால் அப்போது உபரிநீர் இந்த அளவு வெளியேறவில்லை.

ஆர் நட்ராஜ்
தமிழக முன்னாள் டிஜிபி யும் மயிலாப்பூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். நட்ராஜ் மழைக்காலத்தில் தெருக்கள் வாயிலாக வீணாகும் மழை நீரை இந்த நான்கு குளங்களுக்கும் கொண்டுவருவதற்கான முயற்சி எடுத்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

நிலத்தடி நீர் மட்டம்
பெரியகுளம் என்று அழைக்கப்படும் கபாலீஸ்வரர் கோயில் குளத்திலும் தண்ணீர் இல்லாமல் இருந்தது. அதுவும் கணிசமான அளவு நிரம்பியுள்ளது.
பருவமழை தொடங்கும் முன் மயிலாப்பூரில் நிலத்தடி நீர் அதல பாதாளத்தில் இருந்தது. இந்தப் பெருமழை இங்கு நிலத்தடி நீரை உச்சம் தொட வைத்துள்ளது இதனால் மயிலாப்பூர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மந்தவெளி
மயிலாப்பூரின் பக்கத்து பகுதியான மந்தவெளியில் சாலையில் திடீர் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. மந்தைவெளியில் சாலையில் ஆர்டிஓ அலுவலகம் அருகே திடீரென பெரும் பள்ளம் ஒன்று ஏற்பட்டு தார்ச்சாலை உள்வாங்கியது. ஒரு வாகனம் மூழ்கும் அளவுக்கு ஏற்பட்ட பள்ளத்தைப்பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக யாரும் அந்த நேரத்தில் சாலையில் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக தடுப்பு வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது.











Click it and Unblock the Notifications