தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்.. சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் வாரத்தில் 4 நாள் இயங்கும்!
சென்னை: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை வாரத்திற்கு 4 நாட்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 55 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பம், பயணிகளுக்கு கூடுதல் வசதிகள், பாதுகாப்பு வசதிகள், குளிர்சாதன வசதி, வேகம் உள்ளிட்டவைகளால் இந்த வந்தே பாரத் ரயில்கள் பயணிகளுக்கு உதவியாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை - மைசூர், கோவை - பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாராந்திர ரயிலாக சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.
இந்நிலையில், ரயில் எண். 06067/06068 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் என வாரம் 4 நாட்கள் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21 ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க வந்தே சென்னை - நாகர்கோவில் பாரத் சிறப்பு ரயில் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வரும் ஜுலை 11,12,13, 14, 18,19, 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, ஆகிய வழித்தடங்களில் நின்று நாகர்கோவில் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் அண்மையில் நடந்தது. அதன்படி 8 பெட்டிகளுடன் சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவிலை வந்தடைந்தது. அதாவது 8 மணி நேரம் 50 நிமிடத்தில் இந்த ரயில் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வாரத்திற்கு 4 நாட்களுக்கு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் ஏசி சேர் காரில் 1,605 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 3,025 ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் தென் மாவட்ட பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் நிலையில், இதனை நிரந்தர சேவையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications