சிறப்பு வந்தே பாரத் ரயிலால் நொந்து போன பயணிகள்.. முதல் நாளே என்ஜினில் கோளாறு.. நெல்லையில் தவிப்பு
சென்னை: சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில், நெல்லை ரயில் நிலையத்தில் என்ஜின் கோளாறால் புறப்படுவது தாமதம் ஆனது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இயக்கப்படும் மூன்றாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும். ஏற்கனவே சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும் என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. தென் மாவட்டங்களுக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எக்மோரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடைகிறது. சென்னையில் இருந்து வந்தே நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சிறப்பு ரயில்கள்: இந்த நிலையில் தான், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லைக்கு சிறப்பு வந்தே பாரத் ரயிலை தெற்கு ரயில்வே இயக்கியது. தீபாவளி முடிந்த பிறகும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயிலானது, சென்னை எழும்பூரில் இருந்து நவ.16, 23, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்பட்டது.
அதேபோல், அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 7, 14, 21, 28ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை ) காலை 6 மணிக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் (06067) புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமார்க்கத்தில் , திருநெல்வேலியில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில்(06068) புறப்பட்டு, இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்" என்று தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது.
பயணிகள் அவதி: பண்டிகை காலங்கள் முடிந்த போதிலும் சபரிமலை யாத்திரை மற்றும் பொதுமக்களின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் வியாழக்கிழமை தோறும் இயங்கும் வகையில் இந்த ரயில் அறிவிக்கப்பட்டு இருந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தெற்கு ரயில்வே அறிவித்தபடி சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு நெல்லை சென்று அடைந்தது.
இந்த ரயில் சென்னைக்கு 3 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்தில் தயாராக காத்திருந்தனர். ஆனால், வந்தே பாரத் ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கபட்டு கோளாறை சரி செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் 10 நிமிடம் தாமதம் ஆனது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.












Click it and Unblock the Notifications