சென்னை நியூ காலேஜில் எதிரொலித்த போர் நிறுத்த முழக்கம்! பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்
சென்னை: காசா மீது இஸ்ரேல் 19வது நாளாக இன்றும் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து பரவலாக கண்டனங்கள் மேலெழுந்துள்ள நிலையில், சென்னையில் நியூ கல்லூரி மாணவர்கள் போர் நிறுத்தம் கோரி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இதற்கு எதிராக இஸ்ரேல், காசா மீது கடந்த 18 நாட்களாக வான்வழி தாக்குதலை தொடுத்திருக்கிறது. குறிப்பாக இந்த தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 704 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,360 குழந்தைகள் உட்பட 5,791 பேர் உயிரிழந்துள்ளனர். 15,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். காசா என்பது ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு நடுவே இருக்கும் ஒரு துண்டு நிலமாகும். இது மொத்தமாகவே சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும்தான் இருக்கும். இதில் சுமார் 23 லட்சம் பாலஸ்தீன மக்கள் வாழ்கின்றனர்.
இந்த பகுதிக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் என எது வரவேண்டும் என்றாலும் இஸ்ரேலின் அனுமதியில்லாமல் வர முடியாது. இந்நிலையில் போரை காரணமாக கூறி இந்த பகுதிக்கான அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. இதுவரை கைவசம் இருந்த எரிபொருளை கொண்டு ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்து வந்த காசாவின் மருத்துவமனைகளில் தற்போது எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்து போய் இருக்கிறது. எனவே காசாவின் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.
மறுபுறம் இஸ்ரேலுக்கு எதிராக வலுவான குரல்கள் ஒலித்து வருகின்றன. குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதன் பொது செயலாளர், இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார். இஸ்ரேல், பாலஸ்தீனம் பிரேஸில், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றிருந்த மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், "இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. சர்வதேச மனித உரிமை சட்டம் இந்தப் போரில் மீறப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. சர்வதேச சமூகம் இதற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என சுமார் 22 நாடுகளில் பொதுமக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாகவும், மே 17 இயக்கம் சார்பாகவும், இடதுசாரிகள் சார்பாகவும் சில போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் நியூ கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போரை நிறுத்தக்கோரியும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் முழக்கங்களை அவர்கள் எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்னரும் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications