பஸ் பாஸ் வைத்து இனி சென்னை ஏசி பேருந்துகளிலும் பயணிக்கலாம்.. விரைவில் அறிமுகம்!
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஏ.சி பேருந்துகளிலும் மாதாந்திர சலுகை பயண அட்டை (பாஸ்) அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது குளிர்சாதனப் பேருந்தை தவிர்த்து மாதாந்திர பாஸ் மூலம் மற்ற பேருந்தில் பயணித்து வருபவர்கள், புதிய திட்டத்தின் மூலம் குளிர்சாதனப் பேருந்துகளிலும் பயணிக்க முடியும்.

சென்னையைப் பொறுத்தவரை மிக முக்கிய போக்குவரத்து சேவையாக, சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை இருந்து வருகிறது. சாதாரண பேருந்து, டீலக்ஸ் பேருந்துகள், தாழ்தள பேருந்துகள், ஏசி பேருந்துகள் என பல வகையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரில் இயங்கும் ஆயிரக்கணக்கான பேருந்துகளில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அலுவலகங்கள், கல்லூரிகளுக்கு செல்லும் அன்றாட பயணிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயண சலுகை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சாதாரண பேருந்தில் நாள்தோறும் பயணிப்பதற்கான பயண சலுகை அட்டை குறைந்த விலையில் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், போக வர இருமுறை மட்டுமே பயணிக்க முடியும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கு பயணச் சலுகை அட்டைகள் வழங்கப்படுகிறது.அதேபோல், விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டையும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
மாதம்தோறும் ரூ. 1,000 கட்டணமாக செலுத்தி பெறப்படும் இந்த பயணச் சலுகை அட்டை மூலம் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் குளிர்சாதனப் பேருந்துகளை தவிர்த்து, சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, சிற்றுந்து ஆகியவற்றில் பயணிக்க முடியும்.
ரூ. 1,000 அட்டை மூலம் நாளொன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணித்துக் கொள்ள முடியும். தினமும் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த பஸ் பாஸ் முறை வரப் பிரசாதமாக இருந்து வருகிறது.
தினமும் வேலைக்குச் செல்பவர்கள் சமீப காலமாக ஏசி பேருந்துகளில், செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பாஸ் பயன்படுத்தும் மக்கள், ஏ.சி பேருந்துகளில் அதனை பயன்படுத்த முடியாது. பிற மாநகர பேருந்துகளுக்கு பஸ் பாஸ் வழங்குவதைப் போன்று ஏசி பேருந்துகளுக்கும் சிறப்பு பாஸ் வழங்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், குளிர்சாதனப் பேருந்துகளையும் உள்ளடக்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த பயணச் சலுகை அட்டைக்கு ரூ.2,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்த அட்டையைப் பெறுபவர்கள் மாநகரத்தில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளிலும் பயணிக்கலாம். இந்த திட்டம் வருகின்ற ஜூன் மாதத்துக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications