சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. தெரிஞ்சுகாம வெளியே போகாதீங்க!
சென்னை: தலைநகர் சென்னை நந்தனம் பகுதியில் சோதனை முறையில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பஸ், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என பல்வேறு பொது போக்குவரத்து இருக்கும் போதிலும், தனிநபர் வாகன பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து மாற்றம்
இந்நிலையில், இது தொடர்பாகப் போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அடுத்த 10 நாட்களுக்கு இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், "வெங்கட்நாராயணா சாலையில் இருந்து, சேமியர்ஸ் சாலைக்குச் செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயணா சாலை சிக்னல் சந்திப்பில் இடதுபுறம் சென்று, அங்குள்ள டொயோட்டா ஷோரூம் முன் 'யு டர்ன்' வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும்.

செனடாப் சாலை
செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை மற்றும் செனடாப் சாலை சிக்னலில் இடதுபுறம் திரும்பி, சைதாப்பேட்டை நோக்கி, 200 மீட்டர் தூரம் வரை சென்று, டொயோட்டா ஷோரூம் முன் 'யு டர்ன்' அடித்துச் செல்ல வேண்டும்.

பாரதிதாசன் சாலை
பாரதிதாசன் சாலையில் இருந்து, தோனம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை மற்றும் பாரதிதாசன் சாலை சிக்னல் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி நேராக, 300 மீட்டர் தூரம் வரை சென்று, டொயோட்டா ஷோரூம் முன் 'யு டர்ன்' அடித்து செல்ல வேண்டும்" என்று சென்னை போலீசார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைக்க வேண்டும்
போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இதற்கு வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் போலீசார் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த போக்குவரத்து மாற்றம் குறித்த ஆலோசனைகள் வாகன ஒட்டிகள் [email protected] என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications