சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு.. அண்ணா பல்கலைக்கழக மாஜி பேராசிரியர் உள்பட 6 பேர் கைது
சென்னை: சென்னையில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் கவுரவ பேராசிரியர் உள்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ளது ஜானிஜஹான்கான் தெரு உள்ளது. இந்த தெருவில் ‛மாடர்ன் எசன்சியல் கல்வி அறக்கட்டளை' செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையை நடத்தி வந்தவர் ஹமீது உசேன். இவர் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.

இந்நிலையில் தான் ஹமீது உசேன் மற்றும் அவரது அறக்கட்டளை மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார் அறக்கட்டளை நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க தொடங்கினர்.
அதாவது பயங்கரவாத சித்தாந்தங்களை இளைஞர்களுக்கு போதித்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி மதபிரசங்கள் என்ற பெயரில் ரகசிய கூட்டங்கள் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் புகார்கள் கிளம்பின. இந்த புகாரை தொடர்ந்து தான் ஹமீது உசேன் மற்றும் அவரது அறக்கட்டளையை மீதான கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது.
அதோடு சென்னை ராயப்பேட்டை, தண்டயார்பேட்டை, தாம்பரம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஹமீது உசேன் அறக்கட்டளை தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள் கிடைத்தன. அதோடு உளவுத்துறைக்கும் சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் அறக்கட்டளையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
மேலும் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின்போது அவர்கள் 3 பேரும் எச்யூடி எனும் Hizb-ut-Tahrir என்ற சர்வதேச அமைப்புடன் தொடர்பில் இருப்பதும், அதில் உறுப்பினர்களாக செயல்படுவதும் தெரியவந்தது. அதோடு இளைஞர்களை மூளைச்சலவை செய்து Hizb-ut-Tahrir அமைப்புக்கு ஆட்கள் திரட்டியதும் தெரியவந்தது.
இதில் ஹமீது உசேன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் கவுரவ பேராசிரியராக பணியாற்றி கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றவர் என்பது தெரியவந்தது. மேலும் ஹமீது உசேன் தனியாக யூடியூப் ஒன்றை நடத்தி வருவதும், அதில் இந்திய தேர்தலுக்கு எதிராகவும், கிலாபாத் சித்தாந்தம் தொடர்பாகவும் பேசியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்தது. அதுமட்டுமின்றி ஹமீது உசேன் அளித்த தகவலின் பேரில் சென்னை காமராஜபுரத்தை சேர்ந்த முகமது (35), நவாஸ் செரீப் என்ற ஜாவித், தண்டையார்பேட்டையை சேர்ந்த அகமது அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications