திருமண மோசடி புகாரில் கைதாகிறாரா ’நாம் தமிழர்’ சீமான்? நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸ் தீவிர விசாரணை!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமணம் செய்து ஏமாற்றியதாக மோசடி புகார் கொடுத்தது குறித்து நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை விஜயலட்சுமி, தமக்கும் சீமானுக்கும் 2008-ம் ஆண்டு மதுரையில் திருமணம் நடைபெற்றது; மதுரை ஹோட்டலில் பெற்றோர் ஆசீர்வாதத்துடன் சாந்தி முகூர்த்தம் நடந்தது; பின்னர் 7 முறை சீமான் நெருக்கடி கொடுத்து கருக்கலைப்பு செய்தார். பணம், நகைகளை பறித்து சென்றார். குடிபோதையில் பணம் கேட்டு சித்ரவதை செய்தார் பின்னர் கயல்விழியை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் என பக்கம் பக்கமாக சென்னை போலீசில் 2 நாட்களுக்கு முன்னர் புகார் மனு கொடுத்துள்ளார்.

தற்போது இந்த புகார் மனுவை சென்னை போலீசார் விசாரிக்க தொடங்கி உள்ளனர். சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் கோயம்பேடு காவல் மாவட்ட அதிகாரி உமையாள், நடிகை விஜயலட்சுமியை வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சென்னை போலீசில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், 2008-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக சீமானும் நானும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். அப்போது தாம் பெரியாரிஸ்ட், கிறிஸ்தவர் என்பதால் மாங்கல்யம் அணிவிக்க முடியாது; மாலை மட்டும் மாற்றிக் கொள்வோம். அதுவே திருமண அடையாளம் என்றார்.
மதுரையில் மாலை மாற்றி திருமணம் செய்த போது இப்போதைக்கு இதனை வெளியே தெரிவிக்க வேண்டாம்; தலைவர் பிரபாகரன் முன்னிலையில் உலகம் அறிய பிரம்மாண்டமான திருமணம் நடத்துவோம் என வாக்குறுதி அளித்தார் சீமான். சீமான் என்னுடன் இருந்த தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை ஊடகங்களிடம் கொடுத்திருக்கிறேன். நானும் சீமானும் கணவன் - மனைவி என்பதற்கு இவைதான் ஆதாரங்கள். சீமான் எனக்கு ரூ.1 கோடி கொடுக்கவில்லை. எனக்கு சீமான் தரப்பில் இருந்து ரூ.3.5 லட்சம் மட்டுமே தந்துள்ளனர். அதற்கான ஆதாரம் இருக்கிறது.
சீமான் பிரபாகரன் பெயரை உச்சரித்துக் கொண்டு திமிர்த்தனமாக பேசுகிறார். பிரபாகரனின் பெயரை இழிவுபடுத்துகிறார். எனக்கு தெரியாமல் 7 முறை கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தவர் சீமான். என் அனுமதியில்லாமல் கருவை சிதைத்தவர் சீமான். என்னை தற்கொலைக்குத் தூண்டியவர் சீமான். நான் பணத்துக்காக செய்கிற நபர் என்றெல்லாம் சொல்ல வேண்டாம். என்னை கேவலப்படுத்திவிடாதீர்கள். நான் பலமுறை செத்துவிடலாம் என நினைத்திருக்கிறேன். சீமான் தூண்டுதலில் மதுரை செல்வம் என்னை பற்றி இழிவாக, தவறாக பல செய்திகளைப் பரப்புகிறார். மதுரை செல்வத்தால் என் உயிருக்கு ஆபத்து. எனக்கு பாதுகாப்பு தர வேண்டும். சீமான் இரக்கமற்ற மனிதர். அவருடைய மனைவியான என்னையே மோசமான நபராக சித்தரிக்கிறார் என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications