அடேங்கப்பா.. மொத்தம் 13 மூட்டை.. எல்லாம் பணம் பணம்... அள்ளி வந்த ஐயப்பன்.. கப்புன்னு பிடித்த போலீஸ்
சென்னையில் 13 மூட்டைகளில் இருந்த பணம் பிடிபட்டுள்ளது
சென்னை: ஆஸ்பத்திரி வாசலில் மூட்டை மூட்டையாக பணம்.. 5 லட்சம், 7 லட்சம், 20 லட்சம், சில்லறைகள் என 13 மூட்டைகள் பொதுமக்கள் கண்ணில் பட்டு பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை வாசலில் இளைஞர் ஒருவர் நின்றிருந்தார்.. அவரை சுற்றிலும் மூட்டைகள் இருந்தன.
ரொம்ப நேரமாக அவர் அங்கேயே நிற்கவும், அந்த வழியாக சென்ற போலீஸ்காரர்கள், "ஏன் இங்கே நிக்கறீங்க? மூட்டையில என்ன இருக்கு" என்று கேட்டுள்ளனர். அதற்கு இளைஞர், "ஸார்.. இது பண மூட்டை" என்று பதில் சொல்லவும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

திருவள்ளூர்
அதனால், இளைஞரை அந்த மூட்டைகளுடன் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இவரது பெயர் ஐயப்பன்.. வயது 47 ஆகிறது.. திருவள்ளூரை சேர்ந்தவர். கேரளாவிலிருந்து அந்த பணத்தை ஒரு பிரைவேட் பஸ்சில் கொண்டு வந்தாராம்.

காத்திருந்தார்
உதயம் தியேட்டர் எதிரே உள்ள பஸ் ஸ்டேண்டில் இறங்கி உள்ளார்.. ஆனால், அவரை அழைத்து செல்ல வேண்டிய கார் வரவில்லையாம்.. நடுரோட்டில் எங்கு நிற்பது என்று தெரியாமல், ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்றதாக ஐயப்பன் தெரிவித்தார்.

ஒப்படைப்பு
மொத்தம் 13 மூட்டைகள்.. 20 லட்சம் ரூபாய்க்கு 10 ரூபாய் நோட்டுகளும், 7 லட்சம் ரூபாய்க்கு சில்லறைகள் என மொத்தம் 27 லட்சம் இருந்தன.. ஆனால், இந்த பணத்திற்கான முறையான ஆவணம் ஐயப்பனிடம் இல்லை என்பதால், இந்த பண மூட்டைகளை போலீசார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இப்போது, ஐயப்பனிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

கமிஷன்
சென்னையில் வியாபாரிகளிடம் இருந்து 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்கி சென்று கேரளாவில் 10 ரூபாய் கட்டுகளாக சில்லரையாக மாற்றி வருவாராம் ஐயப்பன்.. அதை வியாபாரிகளுக்கு கமிஷன் அடிப்படையில் தரும் தொழிலை செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இப்போது உரிய கணக்கை காட்டிவிட்டால், ஐயப்பன் அந்த மூட்டையை திரும்ப பெற்று கொள்வார் என கூறப்படுகிறது. ஆனால், இது கணக்கில் வந்த பணமா, வராத பணமா என்றுதான் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications