'பெட்ரோல் குண்டு’ பரபரப்புக்கு இடையே.. ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப்பு
சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் சந்தித்து பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீச முயன்றுள்ளார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்ப முயன்ற கருக்கா வினோத்தை போலீசார், விரட்டிப் பிடித்து கைது செய்தனர். மேலும் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளுநர் மாளிகையில் குண்டு வீசியது ஏன் என்று கேட்டதற்கு சிறையில் இருந்த போது வெளியே வருவதற்கு ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தால் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார். கருக்கா வினோத் சொல்வது உண்மைதானா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பெட்ரோல் குண்டுகளை தயாரிப்பதற்கு கருக்கா வினோத்துக்கு வேறு யாரும் உறுதுணையாக இருந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீதுதான் பெட்ரோல் குண்டு விழுந்தது. பெட்ரோல் குண்டு வீச்சில் எந்த சேதமும் இல்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மதுபோதையில் இருந்துள்ளார் என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், இந்த சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஆளுநர் மாளிகை மீது பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரின் துணை செயலர் செங்கோட்டையன் சார்பில் இந்த புகார் காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் காவல்துறை விளக்கத்திற்கும் ஆளுநர் மாளிகை கூறிய தகவலுக்கும் முரண்பாடுகள் இருந்தன. இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications