புத்தாண்டு 2024.. சென்னையில் அனைத்து மேம்பாலத்தையும் மூடும் போலீஸ்.. இப்படி மட்டும் போயிடாதீங்க
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மெரினா கடற்கரை பகுதிகளில் டிசம்பர் 31ம் தேதி இரவு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னையில் புத்தாண்டை கொண்டாடும் போது அசம்பாவிதங்களை தடுக்க மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: 1. மெரினா கடற்கரை உட்புற சாலை 31-ம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.
2.காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31-ம் தேதி இரவு 8 மணி முதல் 1-ம் தேதி காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.
3.அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தைவெளி, ஆர்.ஏ.புரம் 2-வது மெயின் ரோடு, ஆர்.கே.மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
4.டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.
5. பாரிமுனை சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
6.வாலாஜா பாயிண்ட், சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில், பாரதி சாலை - விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்.ஆர்.டி.எஸ். அருகில்), லாயிட்ஸ் சாலை - நடேசன் சாலை மற்றும் நடேசன் சாலை -டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பில் இருந்து காந்தி சிலை வரையில் போக்குவரத்து அனுமதி இல்லை.
7.தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.
8.ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து (வடக்கு) ராஜாஜி சாலை மற்றும் வாலாஜா முனையிலிருந்து போர் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் இரவு 8 மணி முதல் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது.
9.அடையாரிலிருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தைவெளி, வி.கே.ஐயர் சாலை, புனிதமேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை, கத்திட்ரல் ரோடு அண்ணாசலை வழியாக இலக்கை சென்றடையலாம்.

10. பாரிமுனையில் இருந்து அடையார், திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து மாநகர பஸ்களும், ரிசர்வ் வங்கி சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு, என்.எப்.எஸ். ரோடு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம், கதீட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தைவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து இலக்கை சென்றடையலாம்.
11.அனைத்து மேம்பாலங்களும் 31-ந்தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1-ந்தேதி அன்று காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்.
புத்தாண்டு கொண்டாடுவதற்கு மெரினா காமராஜர் சாலை, எலியாட்ஸ் கடற்கரை போன்ற பகுதிகளுக்கு வருவோர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கும் போக்குவரத்து போலீசார் இடங்களை ஏற்பாடு செய்துள்ளனர்." இவ்வாறு சென்னை போலீஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications