வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
சென்னை: சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். சிறுவனை கடத்திய வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மித்லிஷ்குமார்- துர்கா தேவி தம்பதிக்கு 5 வயதில் விஷ்ணு என்ற மகனும் ஷியாம் என்ற 3 வயது மகனும் உள்ளனர். மித்லிஷும் துர்காவும் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
இதனால் அவர்கள் குழந்தைகளை பக்கத்து வீட்டில் விளையாட அனுப்பிவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை துர்கா வேலையிலிருந்து வீடு திரும்பினார்.

வீட்டில் குழந்தை இல்லை
அப்போது 3 வயது மகன் ஷியாம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பக்கத்து வீட்டாரிடம் கேட்ட போது சிறுவன் விளையாடி கொண்டிருந்ததாக கூறினர். இதையடுத்து அவர்கள் பல இடங்களில் குழந்தையை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

மாடியில் வசிப்போர் மாயம்
பின்னர் விசாரணையில் மித்லிஷ் வசிக்கும் வீட்டின் மாடியில் குடியிருந்து வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிவக்குமார், மோனு ஆகியோர் திடீரென மாயமானது தெரியவந்தது. இவர்கள் குறித்து அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் தான் குழந்தையை கடத்தியது தெரியவந்தது.

செல்போன் டவர் மூலம் ஆய்வு
அவர்களது செல்போன் டவர் மூலம் ஆய்வு செய்ததில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று நாக்பூர் சென்று நாக்பூர் சென்ற ரயிலில் பயணித்தவர்களின் விவரங்களை சேகரித்தனர்.

குழந்தை கடத்தல்காரர்கள்
அதில் சிவகுமார் மற்றும் மோனியின் பெயர் இருந்தது. அவர்கள் இருவரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றது தெரியவந்தது. பின்னர் தனிப்படை போலீஸார் சென்னையில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் உதவியுடன் நாக்பூரில் உள்ள போலீஸாரை தொடர்பு கொண்டு அவர்களை பிடிக்க உதவி கேட்டனர்.

ரயிலில் வந்திறங்கியபோது
இதையடுத்து நாக்பூர் ரயில் நிலையத்திலிருநந்து அவர்கள் ரயிலில் இறங்கியதும் அங்கிருந்த ரயில்வே போலீஸார் அவர்கள் சுற்றி வளைத்து அவர்களிடமிருந்து குழந்தை ஷியாமை மீட்டனர். இதையடுத்து தமிழக தனிப்படை போலீஸார் அவர்களை மீட்டு சென்னை அழைத்து வருகிறார்கள். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தும்போதுதான் குழந்தையை கடத்தியது ஏன் என்பது தெரியவரும். 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட காவல் துறைக்கு பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications