சென்னை போரூரில் ரூ.258 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான புதிய நீர்த்தேக்கம்.. அதுவும் எப்படி தெரியுமா?
சென்னை: சென்னை மாநகருக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து தினசரி நீர் பெறப்பட்டு வருகிறது. இது இல்லாமல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் பகுதியான திருப்போரூர் பகுதியில் ஆறாவது நீர் தேக்கம் அமைக்கப்பட உள்ளது. இதனிடையே சென்னை போரூரில் ரூ.258 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 10 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் கிடைக்க போகிறது.
சென்னையில் தற்போது செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஆகிய ஐந்து குடிநீர் தேக்கங்கள் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஐந்தும் சென்னையை ஒட்டியுள்ளது. இதுதவிர கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், தெலுங்கு கால்வாய் திட்டம் மூலம் கிருஷ்ணா நதி மூலம் குடிநீர் சென்னைக்கு கிடைக்கிறது. கிருஷ்ணா நதி நீரை பூண்டி ஏரிக்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கிருந்து கிருஷ்ணா நதி நீர் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தேவைப்படும்போது திறந்து விடுகிறது. இந்நிலையில் சென்னையில் ஆறாவதாக புதிய நீர் தேக்கம் திருப்போரூர் மற்றும் கோவளம் இடையே 4375 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. ரூ.471 கோடியில் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான பணிகளிலும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இதுதவிர அரசு சென்னையை அடுத்த போரூரில் ரூ.258 கோடி மதிப்பில் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள சென்னை குடிநீர் வாரியம் ஆயத்தமாகி வருகிறது.. 11 ஆயிரத்து 486 சதுர மீட்டர் பரப்பளவில் 15 மில்லியன் லிட்டர் கொள்ளளவு சேமிப்பு திறன் கொண்ட வகையில் இந்த நீர்த்தேக்கம் இருக்கும் என்றும், சென்னை, மணலி, மாதவரம் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
இந்த நீர்த்தேக்கத்தை அமைக்க ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் நிதி அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.51.99 கோடி நிதி அளிக்கிறது. 18 மாதங்களில் இந்த திட்டத்தை முடிக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் கீழ் உள்ள 20 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வசிப்பவர்களுக்கு குடிநீர் கிடைக்க போகிறது.
இந்த திட்டத்தின் முதல் படியைக் குறிக்கும் வகையில் முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது.. பம்பிங் நிலையங்கள் மற்றும் குளோரின் கட்டுமானங்கள், எந்திரம் மற்றும் மின்கம்பங்களை நிறுவுதல், ஏற்கனவே உள்ள நீர் வினியோக குழாய் இணைப்புகள் மற்றும் இறுதி சோதனை போன்ற பல முக்கிய கட்டங்களுக்கு பிறகே திட்டம் ரெடியாகும் என்பதால் அதற்கு அதிகாரிகள் முறையாக திட்டமிட்டு வருகிறார்கள். திட்டமிடுதலுக்கு டெண்டர் விடப்பட உள்ளது. இந்த டெண்டரில் ஜெயித்து ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனம் 20 ஆண்டுகள் உள்கட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பொறுப்பை ஏற்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications