சென்னையில் அடிக்கடி மின் வெட்டு.. ஒரு சிலர் மக்களை தூண்டி விடுறாங்க! சிடிஆர் நிர்மல் குமார் பேச்சு
சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு இடங்களிலும் மின் தடை ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் நள்ளிரவில் மின் தடை ஏற்படுவது மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது. மக்கள் ஆங்காங்கே இரவில் போராட்டம் நடத்தும் நிலையில் இது பற்றி மின் துறை அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், ஒரு சிலர் வேண்டும் என்றே மின் தடையை ஏற்படுத்துகிறார்கள் என்றும் சாலை மறியலில் ஈடுபட வேண்டும் என சிலர் தூண்டிவிட்டு போராட செய்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் ஏற்படும் திடீர் மின் தடையால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேடவாக்கம் புஷ்பா நகர், பாபு நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், அதேபோல் ஜல்லடியன்பேட்டை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, புதுநகர், பல்லவன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை நீடித்ததால், கடுமையான வெப்ப உஷ்ணம் காரணமாக குழந்தைகள், முதியவர்கள் என பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் இரவில் தூக்கத்தை தொலைத்த மக்கள் பொறுமையிழந்து சாலையில் வந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகளும், போலீசாரும் சமாதானம் செய்து வைத்தனர்.
கடந்த சில தினங்களாகவே சென்னையில் இந்த சம்பவம் தொடர் கதையாகி வரும் நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிர்மல் குமாரிடம் மின் தடை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:- எங்கெங்கல்லாம் மின் வெட்டு உள்ளது.. எவ்வளவு வேகமாக சரி செய்கிறோம் என்று நேற்றில் இருந்தே பார்த்து இருப்பீர்கள்.
எங்கெங்கல்லாம் தவறான நபர்கள் வேண்டும் என்றே பியூஸ் கேரியரை பிடுங்கி, பவர் பெயிலியர் ஆக்க வேண்டும் என செய்பவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி இருக்கும் இடத்தில் கைது செய்ய முடிந்தது. ஒரு சில இடத்தில் திரும்ப திரும்ப ஒரே மாதிரியான பேட்டர்ன் வருகிறது. பெரம்பூரில் இரண்டு தெருக்களில் ஒரே மாதிரியான பேட்டர்ன் இருக்கிறது. மின்சாரம் தடை வந்ததும் சிலருக்கு மெசேஜ் அனுப்பி உடனே போய் ரோட்டில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்.
பெரம்பூரில் நேற்று பியூஸ் பிடுங்கப்பட்டது. 40 நிமிடத்தில் புது பியூஸ் போடப்பட்டு சரி செய்யப்பட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் தூண்டுதலின் பேரில் சாலையில் நிறுத்தி பிரச்சினை செய்கிறார்கள். இதேதான் அரும்பாக்கத்தில் ஒரு இடத்தில் வயர் கட் ஆகி டிரான்ஸ்பார்மர் பாதிக்கப்பட்டது. அதையும் துரிதமாக நம்ம டீம் சரி செய்தார்கள். எங்கெல்லாம் பிரச்சினை இருக்கிறதோ அங்கெல்லாம் உடனடியாக சரி செய்கிறோம்.
ஒரு சில இடங்களில் வேண்டும் என்றே செய்யப்படும் விஷயங்களை யார் யார் என்று கண்காணித்து பிடிக்கிறோம். பொதுமக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். சிசிடிவி இருப்பதால் ஒரு சிலரை பிடித்தோம். சிசிடிவி இல்லாத இடத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். சந்தேகப்படும் நபர்கள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்












Click it and Unblock the Notifications