அட்சய திருதியை நாளில் பெய்த ஆலங்கட்டி மழை..சென்னையில் சட்டென்று மாறிய வானிலை
சென்னை: கோடை வெப்பம் தகித்த நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடிக்கும் வெயிலுக்கு இதமாக மழை பெய்வதால் ட்விட்டர்வாசிகள் உற்சாகமாக மழையை பதிவிட்டு வருகின்றனர். அட்சய திருதியை நாளான இன்றைய தினம் ஆவடி, ரெட்ஹில்ஸ் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இரவு நேரங்களில் கூட வியர்வையில் நனைய வேண்டியிருக்கிறது. மழையை எதிர்பார்த்து மக்கள் ஏங்கிக்கொண்டிருக்க 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தி சொன்னது.

தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சிகாரணமாக,22.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

24 முதல் 26ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றைய தினம் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே, சென்னையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. குளிர்ந்த காற்று வீசி சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் கனமழையாக பெய்ய ஆரம்பித்தது. ஆலந்தூரில் மாலை நேரத்து மழை என ஒருவர் பதிவிட்டார்.
சென்னையில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்து உடனேயே #ChennaiRains என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. பலரும் தங்கள் பகுதிகளில் பெய்த மழையை வீடியோவாக எடுத்து பதிவிட்டனர். அதில் ஒருவர் ரெட்ஹில்ஸ் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்வதாக பதிவிட்டிருந்தார்.

அட்சய திருதியை தினமான இன்று ஆலங்கட்டி மழை பெய்துள்ளது சென்னைவாசிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த கோடை மழை சென்னையின் வானிலையை சட்டென்று மாற்றியுள்ளது. தகித்த வெப்பத்திற்கு இதமாக இருக்கிறது இந்த கோடை மழை என்றும் நெட்டிசன்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications