சென்னையில் கொரோனா பாதிப்பு.. ராயபுரம் முதலிடம், அண்ணா நகர் 3வது இடம், தப்பித்த அம்பத்தூர்.. விவரம்
சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 6 நாட்களில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50க்கும் குறையாமல் இருந்து வருகிறது. நேற்று மட்டுமே 48 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் 6000க்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 739 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 156 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3வது இடம் அண்ணாநகர்
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரத்தை இப்போது பார்ப்போம். சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 2வது இடத்தில் திருவிக நகர் மண்டலம். அங்கு 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 3 வது இடத்தில் அண்ணா நகர் மண்டலம் உள்ளது. அண்ணா நகரை சுற்றியுள்ள பகுதிகளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

5வது இடம் தண்டையார் பேட்டை
4வது இடத்தில் கோடம்பாக்கம் மண்டலம் உள்ளது. கோடம்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 5 வது இடத்தில் தண்டடையார் பேட்டை மண்டலம் உள்ளது. தண்டையார் பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. பெருங்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 பேருக்கும், வளசரவாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4 பேருக்கும், அடையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 4 பேருக்கும், மாதவரம் மண்டலத்தில் 3பேருக்கும், சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் தலா இரண்டு பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா இல்லாத பகுதி
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் மணலி மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் மட்டுமே யாருக்கும் இதுவரை கொரோன வைரஸ் பாதிப்பு இல்லை. மற்ற 13 மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கி உள்ளது. இதுதவிர சென்னையில் 6 பேர் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவை தடுக்க ஒரேவழி
கொரோனாவை தடுக்க வேண்டும் எனில் நம்மையும் நம் குடும்பத்தையும் தனிமைப்படுத்தி கொள்வதை தவிர வேறு வழியில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே தப்பிக்க உதவும். எனவே அரசு சொல்வதை கேட்டு நடந்தால் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தப்பிக்கலாம். மாறாக வெளியே சுற்றினால் அவரை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையும் சுற்றியுள்ள சமூகத்தையும் பாதித்து விடும்.












Click it and Unblock the Notifications