ரோட்டில் அல்லாடும் தூய்மை பணியாளர்கள்! வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதா? சீமான் வேதனை!
சென்னை: தொடர்ந்து கடந்த 13 நாட்களாக தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தின் வெளியே போராடிவரும் தூய்மைப் பணியாளர்களைப் போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஏமாற்றமும், கவலையும் அளிக்கிறது. போராடும் தூய்மைப்பணியாளர்களில் பெரும்பாலானோர் ஆதரவற்ற பெண்களாக இருப்பதை மாண்பமை நீதிமன்றம் கவனிக்கத் தவறியது வேதனை அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், சென்னையில் போராட்டம் நடத்த அரசால் ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை மோசமான நிலையில் உள்ளது என்பதை கருத்தில் கொள்ளாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

தங்கள் உழைப்பினை உறிஞ்சி உரிமையைப் பறிக்கும் கொடுங்கோன்மைக்கு எதிராக பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி கடந்த 13 நாட்களாக அறவழியில் தொடர்ந்து போராடிவரும் தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகள் குறித்தும், அவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்தும் தீர்வுகாண உரிய நீதியை வழங்குவதற்கு மாறாக, அவர்களின் போராட்டத்தை இடையூறாக நீதிமன்றம் கருதியது வேதனை அளிக்கிறது.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக ஊண் உறக்கமின்றி உரிமைக்காகப் போராடும் நேரத்தில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்று கூறி அவர்களை அகற்ற முற்படுவது பொருத்தமற்றதாகும். நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளைக் கடைபிடிக்காத தமிழ்நாடு அரசு, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதில் மட்டும் விரைந்து முனைப்புக் காட்டுவது, இதற்காகவே காத்திருந்த திமுக அரசின் தீய நோக்கம் தெளிவாகிறது.
ரிப்பன் மாளிகை
தாங்கள் போராடும் இடத்தை விட்டு அகல மாட்டோம் என்ற தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளிக்கிறது. தூய்மைப்பணியாளர்கள் வேறு எந்த தளத்தில், களத்தில் தம்முடைய போராட்டங்களைத் தொடர்ந்தாலும் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அறவழியில் போராடும் மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறை தம் கொடுங்கோன்மை போக்கினைக் கட்டவிழ்த்தால் மாபெரும் போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்." என கூறியுள்ளார்.
போராட்டம் ஏன்?
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 6, மண்டலம் 5 ஆகிய பகுதிகளில் தூய்மை பணிக்கான தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றம்
13 நாட்களாக அவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்களை திரைப்பட நடிகர்கள், பல்வேறு அமைப்புகள், அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications