ஒரு தலைக்காதலுக்காக ரயில் முன் தள்ளிவிட்டு கொலை! சென்னை பரங்கிமலை சத்யபிரியா வழக்கில் நாளை தீர்ப்பு
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஒரு தலைக்காதலுக்காக சத்யபிரியா என்ற பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் நாளை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி நாளை தீர்ப்பளிக்கிறார்.

இந்த தீர்ப்பில் சதீஷுக்கு எந்த மாதிரியான தண்டனை விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கல்லூரிக்கு சென்ற மகள் மாலை திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த மகள் சடலமாக வந்தது பெற்றோர் நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் தீராத ரணத்தை கொடுத்தது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23).
இவர் சத்யபிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.
இப்படித்தான் கடந்த 2022 ஆம் ஆண்டு கல்லூரிக்குச் செல்ல சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யபிரியா வந்தார். அப்போது அங்கு சதீஷும் வந்தார். ரயில் வரும் வரை காத்திருந்த சத்யபிரியாவிடம் போய் தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு சத்யபிரியா, "என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள். என்னால் உன்னை காதலிக்க முடியாது. என் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடு" என சொல்லியுள்ளார். ஆனாலும் சதீஷ் விடாமல் திரும்ப திரும்ப கேட்க, சத்யபிரியா மறுக்க சதீஷுக்கு கோபம் வந்துவிட்டது.
அந்த நேரம் பார்த்து ரயில் வந்தது. அப்போது சத்யபிரியாவை தள்ளிவிட்டார். இதனால் அந்த பெண் ரயில் மோதி இறந்துவிட்டார். தனது மகள் இறந்த துயரத்தை ஏற்க முடியாத மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பெண்ணின் தாய் வரலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். அந்த பெண்ணுடன் இரு தங்கைகள் இருந்த நிலையில் இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் 70 சாட்சிகளிடம் சிபிசிஐடி காவல் துறை விசாரணை நடத்தி முடித்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நிறைவடைந்துள்ள நிலையில் நாளை (டிச.27) தீர்ப்பு வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications