சென்னையில் அடித்து துவைத்த கோடை மழை.. இயல்பைவிட 129% கூடுதலாக பதிவு!
சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் இயல்பை விட 129% அளவுக்கு மழை கூடுதலாக பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே வரை சென்னையில் 48.8 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. நடப்பாண்டில் 111.7 மி.மீ மழை பெய்துள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் வெயில் உக்கிரமாக இருக்கும் மாதம் மே மாதம்தான். ஆனால் இந்த ஆண்டு மே மழையை கொடுத்திருக்கிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் கொட்டி தீர்த்த மழை, சென்னையை குளுகுளு என மாற்றியிருக்கிறது. வழக்கம் போல மதியம் 2 மணி வரை வெயில் அடித்தாலும், 2 மணிக்கு மேல் மழை கொட்ட தொடங்கிவிடுகிறது. நேற்றும் கூட சென்னையில் பலத்த மழை பெய்திருக்கிறது.
தொடர் மழை காரணமாக சென்னையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு மே மாதத்தில் வெயில் 104 டிகிரியை தாண்டாமல் இருக்கிறது. கடைசியாக 2004ம் ஆண்டு மே மாதம் இதுபோல ஜில்லென இருந்தது. அதன் பின்னர் வந்த ஆண்டுகளில் மே மாதத்தில் வெயில் கொளுத்த தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டு வெயில் குறைந்திருப்பது சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், காலநிலை மாற்றத்தால் இதுபோன்ற சீரற்ற வானிலை நிலவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட காலத்தில் வெயிலும், குறிப்பிட்ட காலத்தில் மழையும்தான் சரியானது. பருவம் மீறி பெய்யும் மழை விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மட்டுமல்லாது புதிய வகை தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்களையும் அதிகரிக்க செய்யும். மட்டுமல்லாது இந்த மழை டெங்கு நோயை உருவாக்கும் கொசுக்களின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும். நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் டெங்கு தொற்றால் 35 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 6 மாதங்களில் டெங்கு தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் பருவமழை தமிழ்நாட்டை விட மிக மோசமாக இருக்கிறது. கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் நேற்று மட்டும் அம்மாநிலத்தில் சுமார் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆலப்புழா, கோட்டயம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதேபோல அம்மாநிலத்தில் ஏற்படும் பேரிடர் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக புறப்பட்டுள்ளனர். இதில் ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக கேரளாவுக்கு விரைந்துள்ளனர். இவர்கள் பத்தினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என சொல்லப்படுகிறது.
தமிழகம், கேரளா தவிர கர்நாடாகவின் கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்த வருகிறது தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெய்த கனமழையால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல அசாம் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications