சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. ரூ.993 கோடி மெகா திட்டம்.. மத்திய அரசு பச்சை கொடி காட்டியது!
சென்னை போக்குவரத்தின் உயிர்நாடியாக இருக்கும், புறநகர் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் முக்கிய திட்டமாக அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரையிலான இரட்டை ரயில் பாதைக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் ரூ.993 கோடி மதிப்பிலான இந்த திட்டம் நிறைவேறினால், ரயில்களின் தாமதம் கணிசமாகக் குறையும், இதேநேரத்தில் புறநகர் ரயில் சேவைகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 68 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த திட்டம் தெற்கு ரயில்வே பிரிவுக்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது பெரும் நெரிசலில் இயங்கும் இப்பாதையில் கொண்டு வரப்படும் doubling திட்டம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இந்த பாதை உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் இந்த வழியில் பயணம் செய்து வருகின்றனர்.
ஆனால் தற்போதுள்ள ஒற்றைப் பாதை முழுமையான பயன்படுத்தப்படுவதால், ஒரு ரயில் தாமதமானாலே மற்ற ரயில்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரங்களில் ரயில்கள் நெரிசலில் சிக்கி பயணிகள் பெரும் சிக்கலை அனுபவித்து வருகின்றனர்.
இரட்டை பாதை வந்தால் என்ன பயன்?
அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் பாதை தற்போது ஒற்றை பாதையாக உள்ளது, இதை இரட்டை பாதையாக அமைக்கப்பட்டால், தற்போதுள்ள போக்குவரத்து அழுத்தம் பெருமளவு குறையும். ஒரே நேரத்தில் எதிரெதிர் திசையில் ரயில்கள் இயங்கும், இதனால் ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் தவிர்க்கப்படும்.
இதனால் ரயில்கள் பெரும்பாலும் நேரத்துக்கு இயக்க முடியும். கூடுதல் புறநகர் ரயில்களை இயக்கவும் வாய்ப்பு கிடைக்கும். சென்னை சுற்றியுள்ள வேகமாக வளரும் பகுதிகளுக்கு இது பெரிய நன்மையாக அமையும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சரக்கு போக்குவரத்துக்கும் பெரிய உதவி
இந்த திட்டம் பயணிகள் சேவைக்கு மட்டும் அல்லாமல் சரக்கு போக்குவரத்துக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சிமெண்ட், கார்கள், உணவு தானியங்கள், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் இந்த வழித்தடத்தில் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது ரயில் டிராபிக் நெரிசல் காரணமாக சரக்கு ரயில்களும் அடிக்கடி தாமதமாகும் நிலை உள்ளது.
இரட்டை பாதை வந்த பிறகு பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் சீராக இயக்க முடியும். இதனால் தொழில்துறை போக்குவரத்து வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினசரி பயணிகளுக்கு நிம்மதி
சென்னை புறநகர் ரயில் சேவை தமிழகத்தின் மிக முக்கிய பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்று. அரக்கோணம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினசரி பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.
புதிய இரட்டைப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயண நேரம் குறையும், கூட்ட நெரிசல் கட்டுப்படும், மேலும் அதிக ரயில்களும் இயக்க முடியும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சென்னை நகரம் வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், புறநகர் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக அவசியமாகியுள்ளது. அரக்கோணம்-செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை திட்டம் இதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த திட்டம் முழுமையாக நிறைவேறினால், சென்னை புறநகர் ரயில் சேவையின் தரம் உயர்வதோடு, எதிர்கால நகர வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று போக்குவரத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications