சென்னைவாசிகள் நோட் பண்ணுங்கப்பா.. இன்று மின்சார ரயில்கள் ஓடாது! வேற என்ன செய்வது.. ஐடியா இதோ!
சென்னை: சென்னையில் இன்று புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதை எடுத்து ரயில் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் வசதிக்காக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில் சேவையை பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குறைந்த செலவில் வேகமாக சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக வேலை, கல்லூரிக்கு செல்லும் மக்கள் மின்சார ரயில்களால் அதிகம் பயனடைந்து வருகின்றனர். 5 ரூபாய் கட்டணத்தில் சென்னையில் 55 மின்சார ரயில்களின் சேவைகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் வழித் தடத்திலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது. இதனால் பணி நடைபெறும் நேரத்தில் சென்னை கடற்கரை தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் இரு மார்க்கத்திலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை தாம்பரம் கோடம்பாக்கம் இடையே இரு மார்க்கத்திலும் 30 நிமிட இடைவெளியில் மொத்தம் 46 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதும் நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார வகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,"09.03.2025 அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 09.03.2025 அன்று தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக மா.போ.கழகம் இயக்க உள்ளது. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications