மூக்கு பொடி சித்தர் கோயில் வாசலில் பகீர்.. சிவன் சொன்னதால் இளைஞரை கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: சென்னையில் காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளி ஒருவர் சிவபெருமான் உத்தரவின் பேரில் கொலை செய்ததாக கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் நேற்று இரவு ஒருவர் தான் திருமுடி விநாயகர் கோயில் தெருவில் ஒருவரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பல அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார். சரணடைந்த நபர் திருவான்மியூர் குப்பம், ஜெயராம் தெருவை சேர்ந்த கமல் உஸ்மான் (48) என தெரியவந்தது. இவர் மீனவ குப்பத்தில் தனியாக வசித்து வருகிறாராம்.
20 ஆண்டுகளுக்கு முன்பே இவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம். 2011ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கமல் உஸ்மான் தீவிர சிவ பக்தராக மாறிவிட்டார். இதனால் அவர் தினமும் அந்த பகுதியில் உள்ள மூக்கு பொடி சித்தர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த நிலையில் திருவான்மியூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் செந்தில் குமார் (40).

இவர் தினமும் பெண்களை அழைத்து வந்து கோயில் வாசல் முன்பு பேசி வருவது வழக்கமாம். இது உஸ்மானுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் செந்தில் குமார் நல்லவர் கிடையாது, அவர் கெட்டவர் என உள் மனசு சொல்லியதால் இதுகுறித்து கடவுளிடம் அவர் முறையிட்டாராம். அப்போது கடவுள், செந்தில் குமார் கெட்டவர் என்றால் அவரை கொன்றுவிடு என சொன்னாராம்.
இதையடுத்து வீட்டில் தீட்டி வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு செந்தில் குமாரிடம் சென்ற உஸ்மான் 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தி கொலை செய்துவிட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் செந்தில் குமாரின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடவுள் கூறியதால் ஒருவரை கொலை செய்ததாக கூறிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications