மெட்ரோ பணிகளுக்காக! அலேக்காக நகர்த்தப்படும் ஆயிரம் விளக்கு விநாயகர் கோயில் கோபுரம்! ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமையவுள்ள மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் பணிகளுக்காக பழமை வாய்ந்த ஸ்ரீரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்களின் ராஜகோபுரத்தை நகர்த்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும் சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் தற்போது 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த மெட்ரே ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்கிறார்கள். சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் நிலைய பணிகள் நடைபெறுகின்றன. இந்த , மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு நேரடி சேவையை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மீனம்பாக்கம் முதல் பூந்தமல்லி வழியாக பரந்தூர் புதிய விமானம் நிலையம் வரை மொத்தம் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த வழித்தடம் அமைய உள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்கு செல்லும் வகையில் இந்த மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பணிகளுக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் கோபுரங்கள் மற்றும் அங்குள்ள ராஜகோபுரத்தை இடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலயம் காப்போம் கூட்டமைப்பின் தலைவர் மயிலாப்பூரை சேர்ந்த பி.ஆர்.ரமணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் இருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கோயில்களுக்கும் கோபுரங்களுக்கும் எந்த சேதமும் இல்லாமல் மெட்ரோ பணிகளை நிறைவேற்ற முடியுமா என்பது உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, வழக்கறிஞர் ராமமூர்த்தி, மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு வழக்கறிஞர் ரீட்டா சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர். அப்போது இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகள் பூமிக்கு அடியில் 30 அடி ஆழத்தில் தோண்டப்பட்டு நடைபெறுகிறது.
அப்போது துர்க்கை அம்மன், ஸ்ரீரத்தின விநாயகர் கோயிலின் ராஜகோபுரம் நிச்சயமாக பாதிக்கும். எனவே ராஜகோபுரத்தை நவீன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 5 மீட்டர் தூரத்திற்கு உள்புறமாக நகர்த்தி வைத்துவிட்டு பணிகள் முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில் வைத்துவிடலாம்.
ரத்தின விநாயகர் கோயிலை இடிக்க நேர்ந்தால் பாலாலயம் நடத்தி அப்புறப்படுத்திவிட்டு பணி முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில் அமைத்துவிடலாம். ஆனால் இந்த இரு கோயில்களுக்கும் எல்லா பணிகளும் முடிந்தவுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும். மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழிகளை கோயில்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வண்ணம் அருகில் உள்ள காலியிடத்திற்கு மாற்ற வேண்டும்.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி மீண்டும் கோயிலுக்கு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளதால் அதுகுறித்தும் மெட்ரோ நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications