சென்னை டூ பெங்களூரூ, சென்னை டூ கோவை.. பயண நேரம் அதிரடியாக குறையுது.. மேஜர் குட்நியூஸ்
சென்னை: சென்னை டூ பெங்களூரு இனி வெறும் 4 மணி நேரத்தில் ரயிலில் போக முடியும். ஆம்னி பேருந்துகளுடன் போட்டி போடும் வகையில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை கோவை பயண நேரமும் ரயிலில் அதிரடியாக குறைய போகிறது. இதைபற்றி விரிவாக பார்ப்போம்.
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 330 கிலோ மீட்டர் தூரம் ஆகும். பெங்களூருவுக்கு பேருந்துகள் எல்லாம் கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்கின்றன. ஆனால் ரயில்கள் வேலூர்,ஜோலார்பேட்டையை கடந்து ஆந்திராவின் குப்பம் வழியாக பங்காருபேட் அடைந்து அப்படியே பெங்களூரு சென்றடைகின்றன. கார்களில் நீங்கள் மின்னல் வேகத்தில் சென்றாலும் போக்குவரத்து நெரிசல், சுங்கச்சாவடி போன்றவை உங்களை கண்ணீர்விட வைத்துவிடும்.

காரிலோ அல்லது ஆம்னி பேருந்துகளிலோ சென்றால் பயணநேரம் 6 மணிநேரத்திற்கு குறைவாக கண்டிப்பாக இருக்காது. காரணம் தாங்க முடியாத அளவிற்கு இருக்கும் போக்குவரத்து நெரிசல் தான்.
அதே நேரம் ரயில்கள் 5.30 மணி நேரத்திலேயே சென்றுவிடும். இப்போது அந்த நேரம் இன்னமும் வெகுவாக குறைந்துள்ளது. 4.30 மணி நேரம் முதல் 4.45 மணி நேரத்திலேயே சென்னை டூ பெங்களூரு செல்ல முடியும்.
பொதுவாக ரயில்கள் வேகமாக செல்ல வேண்டும் என்றால் அந்த அளவிற்கு தண்டாவளங்கள் கட்டமைப்பு ரீதியாக சரி செய்யப்பட வேண்டும். அதற்கான பணிகளை கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை -அரக்கோணம் இடையே ரயில் பாதை சீரமைக்கப்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 130 கிமீ வேகம் வரை ரயில்கள் இந்த வழித்தடத்தில் செல்கின்றன.
இதனிடையே அரக்கோணம் ஜோலார்பேட்டை வழித்தடத்திலும் ரயில்பாதையில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு, சிக்னல்கள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையேயான 144 கிலோ மீட்டர் தூர பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் தற்போதைய மணிக்கு 110 கிலோ மீட்டரிலிருந்து மணிக்கு 130 கிலோ மீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில்கள் இன்னும் விரைவாகவே செல்ல முடியும்.
தற்போது வேகத்தின் அதிகரிப்புக்கு பிறகு சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் ரயில்களின் ஒட்டுமொத்த பயண நேரம் 4.25 நிமிடங்களாக குறைந்துள்ளது. வந்தேபாரத் ரயிலின் பயண நேரம் 4 மணி நேரமாக குறைகிறது. முன்னதாக சதாப்தி மற்றும் பிருந்தாவன் விரைவு ரயில்களில் பெங்களூரு செல்ல 5.30 மணி நேரம் அல்லது 6 மணி நேரம் ஆகும். இனி 4.30 மணி நேரத்திலேய பெங்களூரு போக முடியும்.முழு பாதையும் சீரமைக்கப்பட்டால் இன்னமும் பயண நேரம் கணிசமாக குறையும்.
அரக்கோணம் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் இயங்கும் 124 ரயில்கள் அடுத்த வாரத்திலிருந்து மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது.இதன் காரணமாக பெங்களுரு மட்டுமின்றி கோவை செல்லும் ரயில்கள், கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு செல்லும் ரயில்கள், கர்நாடகாவின் மங்களூரு செல்லும் ரயில்கள், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை செல்லும் ரயில்களின் நேரம் கணிசமாக குறையக்கூடும்












Click it and Unblock the Notifications