இனி சென்னையில் வெள்ள பாதிப்பு வராது? பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தங்கம் தென்னரசு
சென்னை: ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் சென்னையில் வெள்ளம் வருவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இதனை தவிர்க்க ரூ.88 கோடியில் 7 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.
இதன் மூலம் சென்னைக்கு வெள்ள பாதிப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பிரச்சனைக்கு இந்த பூங்காக்கள் மூலம் தீர்வு எட்டப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

நவம்பர், டிசம்பர் மாதம் வந்துவிட்டால் சென்னை மக்களுக்கு வெள்ள பயம் பிடித்துக்கொள்ளும். ஏறத்தாழ எல்லா கார்களும் மேம்பாலங்களில் பார்க் செய்யப்படும். தாழ்வான வீடுகளில் வெள்ளம் தேங்கும் என்பதால் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவை கட்டில் மேல் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். இந்த வெள்ள பிரச்சனைக்கு எப்போதுதான் தீர்வு எட்டப்படும்? என்று சென்னை மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்தனர்.
அதிகரிக்கும் மக்கள் தொகை, அதற்கேற்ப உயரும் கட்டுமானங்கள், குப்பை கழிவுகள் ஆகியவை மழைநீர் வடிகாலுக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. இதனை சரி செய்வதை காட்டிலும், நீர் தேங்குவதற்கு ஏற்ப குளங்களையும், இதர நீர் தேக்கங்களையும் அமைப்பதுதான் மழைநீர் வடிகாலுக்கு சிறந்த தீர்வு என்று முன்மொழியப்பட்டது. இதனையடுத்து கிண்டியில் 2 குளங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை, இந்த குளத்தில் வடிந்து வந்தது.
இதனால் கிண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, இதே போன்று புதிய நீர் நிலைகளை உருவாக்க தமிழக அரசு யோசித்து வந்தது. இதன் அடிப்படையில்தான் தற்போது 7 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார். மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 7 இடங்களில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும். இது மழைநீர் வடிகாலாக செயல்பட்டு வெள்ள பாதிப்பை தடுக்கும்.
எனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் சென்னைக்கு வெள்ள பாதிப்பு குறையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பை சூழலியலாளர்களும் வரவேற்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications