வெறிச்சோடிய சென்னை.. சொந்த ஊருக்கு பயணித்த 27 லட்சம் பேர்! இதுதாங்க உண்மையான மெட்ராஸ்!
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊருக்கு சென்றதால் சென்னை வெறிச்சோடி காணப்படுகிறது. ஏறத்தாழ 1 லட்சம் வாகனங்கள் கடந்த 2 நாட்களில் சென்னையிலிருந்து வெளியேறியிருக்கிறது.
சொந்த வாகனங்கள் தவிர, பொதுப்போக்குவரத்துகளை பயன்படுத்தியும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர். இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

சென்னையிலிருந்து கடந்த 2 நாட்களில் 96,905 வாகனங்களில் பொதுமக்கள் விழுப்புரத்தை கடந்து சென்றுள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தற்போது வரை 51,905 வாகனங்களில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளனர். மக்கள் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவே அதிக அளவில் சொந்த ஊர் திரும்பியதால் முக்கிய சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன.
பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கிறது. கடந்த 2 நாட்களில் 7,500 அரசு பேருந்துகளில் இதுவரை 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சொந்த வாகனம், ஆம்னி பேருந்துகள் என்று கணக்கெடுத்துக்கொண்டால், மொத்தம் 17 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர். அதேபோல சென்னையிலிருந்து சுமார் 10 லட்சம் பேர் ரயிலில் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். எனவே சென்னையின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னை தவிர விழுப்புரம், திண்டுக்கல், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் சொந்த ஊர் திரும்பிய நிலையில், இரண்டாம் தர நகரங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications