Chennai Rains: சென்னையில் அடுத்த இன்னிங்ஸ்.. ஜனவரி 10, 11 தேதிகளில் கனமழை.. வானிலை மையம்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வரும் ஜனவரி 10-11 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையத்தின் அறிக்கையில், தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஜனவரி 10ஆம் தேதி முதல் அதிக மழை இருக்கும். வரும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் புதுவை, காரைக்காலிலும் வரும் 10-ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் கனமழை இருக்கும்.

எச்சரிக்கை
இதையடுத்து மேற்கண்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை நிலவரத்தை வைத்து மக்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வடஇந்தியா முழுவதும் நிலவும் மேற்கத்திய காற்று மற்றும் வலுவான கிழக்கத்திய காற்றால் இந்த வானிலை மாற்றம் நிகழ்கிறது.

22 டிகிரி செல்சியஸ்
சென்னையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். பகல் நேரத்தில் 29 டிகிரி செல்சியஸாக வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சம் 22 டிகிரி சென்டிகிரேட்டாக இருக்கும். அது போல் ஆந்திரா தலைநகர் அமராவதியில் சில இடங்களில் மேக மூட்டமாகவும் சில இடங்களில் மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை
வடகிழக்கு பருமழை காலம் முடியவில்லை என இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும் இந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி வறண்ட வானிலையே தமிழகத்தில் நிலவுகிறது. தமிழகத்தில் ஜனவரி 1 முதல் 6 தேதிகளை நீண்ட கால சராசரி மழைப் பொழிவுடன் ஒப்பிடுகையில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே வேளையில் ஆந்திராவில் 2 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.

மேகவெடிப்பு போன்ற மழை
சென்னையில் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கனமழை பெய்தது. கிட்டதட்ட மேகவெடிப்பு போன்றதொரு மழையை சென்னை சந்தித்தது. இதுகுறித்து எந்தவித வானிலை மைய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இது வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்ததால் இத்தகைய மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications