ஃபுல் போதையில் ரூபென்! லோன் சுரேஷ் யாருனு கேட்டு கள்ளக்காதலி கொலை! திருவல்லிக்கேணி லாட்ஜில் திடுக்!
சென்னை: சென்னையில் திருவல்லிக்கேணியில் ஒரு தங்கும் விடுதியில் 28 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஜெயா (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). இவருடைய கணவர் கார்த்திகேயன். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சூளைமேட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 28 வயதான ஜெயாவுக்கு ரூபென் (36) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டு காதலை வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் கணவன்- மனைவி என கூறிக் கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இருவரும் அறையிலேயே மது அருந்தியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ரூபென், ஜெயாவின் செல்போனை பார்த்துள்ளார். அதை ஓபன் செய்த போது லோன் சுரேஷ் என்ற பெயர் கொண்ட தொலைபேசி எண் இருந்துள்ளது. அந்த எண்ணிற்கு ஜெயா அடிக்கடி பேசியதும் தெரியவந்தது.
இதையடுத்து "சுரேஷ் யாரு, அவனோட உனக்கென்ன அடிக்கடி பேச்சு" என ரூபென், ஜெயாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ஜெயா ஏதேதோ சொல்லி சமாளித்துள்ளார். ஆனாலும் ரூபென் விடாமல் யார் யார் என கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஜெயாவுக்கு கோபம் வந்து, " நீ என்ன எனக்கு தாலி கட்டியிருக்கியா, சும்மா ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்கே" என கடிந்துள்ளார்.
அதற்கு ரூபென், "உன் புருஷனை விட்டுவிட்டு என் கூட வந்திருக்கே, நாளைக்கு என்னையும் விட்டுட்டு யார் கூடனா போய்ட்டீனா என்ன பண்றது, அதுக்குத்தான் கேட்குறேன்" னு கூறியுள்ளார். மீண்டும் ரூபென் கேட்ட போது , அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது, இப்ப என்ன பண்ணுவே? என ஜெயா கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரூபென், "உண்மையை சொல்லு" என கேட்டு அவரது கழுத்தை நெரித்துள்ளார். ஒரு கட்டத்தில் ரூபெனின் கை இறுகியதால் ஜெயா மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறி போய் வெளியே வந்த ரூபென், அங்கிருந்த விடுதி மேலாளரிடம், ஜெயாவை யாரோ கொன்றுவிட்டார்கள் என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மேலாளர், இவர்கள் கணவன் - மனைவி என்றுதானே சொன்னார்கள். இப்போது கொலை செய்துவிட்டார்கள் என கூறிவிட்டு இவர்கள் பாட்டுக்கு செல்கிறார்களே என நினைத்தபடியே அறைக்கு சென்று பார்த்தார், அங்கு ஜெயா மயங்கிய நிலையில் இருந்தார்.
இதையடுத்து திருவல்லிக்கேணி போலீஸாருக்கு புதார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் , மயக்க நிலையில் இருந்த ஜெயாவை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஜெயாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், கொலை செய்து விட்டு தப்பிய ரூபெனை வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயின் உடலை பார்த்து அவருடைய இரு குழந்தைகளும் அழும் காட்சி காண்போரை கலங்க வைக்கிறது.












Click it and Unblock the Notifications