27 வயசில் இப்படியா ஆகனும்! சென்னை திருமண வீட்டில் ஆட்டம் போட்ட இளைஞர்! அடுத்த நொடியே கலங்கிய உறவுகள்
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் நேற்று முன் தினம் மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், டிஜே இசைக்கு நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபோது இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பதை பதைக்க செய்துள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை அசோக் நகர் 4 வது தெருவை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 27). விசுவல் கம்யூனிகேசன் படிப்பை படித்துள்ளார். இவரது தந்தை மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். தந்தைக்கு உதவியாக சுபாஷும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவரது நண்பர் ஒருவர் திருமணம் தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது.

திடீரென விழுந்த இளைஞர்
இந்த திருமணத்துக்கு நண்பர்களுடன் சுபாஷும் பங்கேற்று இருந்தார். நேற்று முன் தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் டிஜே கச்சேரி நடந்தது. அப்போது நண்பர்களுடன் சேர்ந்து பாடல்களுக்கு ஏற்ப சுபாஷும் நடனமாடிக்கொண்டிருந்தார். திடீரென அவர் மயங்கி விழுந்தார். தலைக்குப்புற விழுந்த சுபாஷை நண்பர்கள் பிடித்து என்ன ஆனது என்று கேட்டனர். ஆனால் அவர் அப்படியே மயங்கிய நிலையிலேயே கிடந்தார்.
இதனால் பதறிப்போன நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சுபாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். தொடர்ந்து தகவல் அறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாரடைப்பால் உயிரிழந்தாரா?
மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுபாஷ் நண்பர்கள் சிலருடன் ஆடிக்கொண்டிருக்கிறார். உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்த அவர் திடீரென தலைக்குப்புற விழும் வீடியோ பதிவாகியிருந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். நண்பரின் திருமண விழாவில் கலந்துகொண்ட இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
தற்போதைய இளைஞர்களின் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை, போதுமான அளவு துங்காமல் இருப்பது என இதற்கு பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகிறது. எனவே இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் சின்ன சின்ன அசகவுரியங்களை அலட்சியம் செய்யாமல் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை தேவைப்பட்டால் எடுத்துகொண்டு உடல் நலனை பேண வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications