"அது நமஸ்தே இல்லைங்க வணக்கம்..!" வெளிநாட்டு செஸ் வீரர்களுக்கு.. கிளாஸ் எடுக்கும் தமிழர்கள்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்குச் சென்னையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து வெளிநாட்டு வீரர்களின் ட்வீட்டிற்கு, நமது நெட்டிசன்கள் ஜாலியாக கமென்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தலைநகர் சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக மாமல்லபுரத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
நேற்று தொடங்கிய 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட்
உலகெங்கும் சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளனர். இதற்கான தொடக்க விழா நேற்றைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதில் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

வெளிநாட்டு வீரர்கள்
அதேபோல வெளிநாட்டு வீரர்கள் பலரும் செஸ் ஒலிம்பியாட்டில் உற்சாகமாகக் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தப் போட்டிக்காகக் கடந்த சில நாட்களாகவே வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவருக்குமே தமிழ்நாடு அரசு சார்பில் மிக உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும், நட்சத்திர விடுதியில் தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

பாராட்டு
செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் அனைத்தும் மிக சிறப்பாக நடந்துள்ளதாக வெளிநாட்டு வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் எந்தவொரு பிரச்சினையையும் சந்திக்கவில்லை என்று பாராட்டி வருகின்றனர். இதனிடையே செஸ் வீரர்கள் ஒலிம்பியாட் தொடர்பான படங்களையும் தங்கள் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதில் சிலவற்றுக்கு நமது நெட்டிசன்கள் சென்று கிளாசும் எடுக்கிறார்கள். இதை செஸ் வீரர்களும் கூட ஜாலியாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.

நமஸ்தே இல்லை வணக்கம்
அப்படித்தான் பிரான்ஸ் நாட்டின் செஸ் சாம்பியனும் கிரான்ட் மாஸ்டருமான ஆண்ட்ரியா நவ்ரோடெஸ்கு தனது ட்விட்டர் பக்கத்தில், "15 மணி நேர பயணத்திற்குப் பிறகு, ஒரு அழகிய இடத்தில் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது! மிகவும் அன்பான வரவேற்பு.. நமஸ்தே" என்று பதிவிட்டு இருந்தார். அற்கு நமது நெட்டிசன்கள் தமிழ்நாட்டில் நமஸ்தே என்று கூற மாட்டோம்.. வணக்கம் என்றே கூறுவோம் என்று குறிப்பிட்டார். இதை ஆண்ட்ரியாவும் ஏற்றுக் கொண்டு வணக்கம் என்று குறிப்பிட, அது லைக்ஸ் அள்ளியது.

தமிழக உணவு
அதேபோல செஸ்சேமில் தலைவர் கீர்ட் வான் டெர் வெல்டே இட்லி படத்தைப் பதிவிட்டு, அருமையான ஒரு இந்திய உணவைச் சாப்பிட்டதாக ட்வீட் செய்து இருந்தார். இதற்கும் நம்ம நெட்டிசன்கள் சென்று, அது இந்திய உணவு இல்லை தென்னிந்திய உணவு, அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் உணவு என்று பதிவிட்டுள்ளார்.

லிஸ்ட்
Chess Intense ட்விட்டர் பக்கத்தில் உள்ளூர் உணவுகளைச் சாப்பிடுவதாக ட்வீட் செய்து இருந்தனர். அதற்குத் தோசை, வடை, பொங்கல் எனப் பெரிய லிஸ்டை போட்டு, அனைத்தையும் மறக்காமல் சாப்பிடும்படி ஐடியா கொடுத்தார் ஒரு நெட்டிசன்!

இட்லியா தோசையா
அதேபோல மைக் க்ளீன் என்பவர் ஹோட்டலில் நீச்சல் குளத்தில் இருந்தபடி, இட்டியை உண்பதாக ட்வீட் செய்து இருந்தார். அதற்குக் கீழே கமெண்டில், ஏன் தோசையை விட்டுவிட்டு அனைவரும் இட்லி சாப்பிடுகிறார்கள் என ஒருவர் கேட்க, "என்னது காலை உணவுக்குத் தோசை கிடைக்குமா! நாளை கண்டிப்பாக டிரை செய்கிறேன்" எனப் பதிவிட்டார். சொன்னது போலவே மறுநாள் காலை தோசையையும் இட்லியையும் சேர்ந்து ஒரு பிடி பிடித்துள்ளார் மைக்!

தமிழகம் செஸ் மயம்
ஜெர்மனியன் கெவின் ஹோகி நேபியர் பாலத்திற்கு செஸ் பலகை போல வடிவமைக்கப்பட்டதைத் தனது ட்விட்டரில் பகிர்ந்து, "இந்தியாவில் எல்லா இடத்திலும் செஸ் தான் உள்ளது. செஸ் ஒலிம்பியாட் நடத்த மிகச் சிறப்பான இடம்" எனப் பதிவிட்டு இருந்தார். அதற்குக் கீழே ஒருவர் இந்தியாவில் இல்லை.. தமிழ்நாட்டில் தான் அனைத்து இடத்திலும் செஸ் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications