சர்ச்சை பேச்சு... எதையும் கரெக்டா பேசுங்க... அமைச்சரிடம் கடுகடுத்த முதல்வர்
சென்னை: எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கருப்பணன் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையில் சிக்கியதால் அவரை அழைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ஏன் பேசுகிறீர்கள் என கொந்தளித்துள்ளார்.
கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் இனி பேசினால் கவனமுடன் பேசுமாறும், இல்லையெனில் கடும் நடவடிக்கைக்கு தயங்கமாட்டேன் எனவும் முதல்வர் தரப்பில் எச்சரிக்கப்பட்டதாம். இதனிடையே அமைச்சர் கருப்பணன் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்க முதல்வர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு நடைபெற்ற பின்னர் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமே கலந்துகொள்கிறார்.

அமைச்சர் கருப்பணனை பொறுத்தவரை அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி வம்பில் மாட்டிக்கொள்வது வழக்கம். நொய்யல் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் உண்டான நுரையை சோப்புபோட்டு குளிப்பதால் ஏற்படும் நுரை என கூறி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கினார். இப்போது திமுக வென்ற ஒன்றியங்களுக்கு அரசு குறைந்த நிதியே ஒதுக்கும் என பொதுவெளியில் பேசி அடுத்த சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என திமுக பொருளாளர் துரைமுருகன் ஆளுநரிடம் புகார் மனு அளித்தார்.
துரைமுருகன் புகார் மனு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்ட ஆளுநர் மாளிகை, அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை அழைத்து கண்டிக்குமாறும் கூறியுள்ளது. இதையடுத்து அமைச்சர் கருப்பணனிடம் கடுமையாக நடந்து கொண்டாராம் முதல்வர். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குமைச்சர் கருப்பணன் தூரத்து உறவினர் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications