முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்! புறப்பட்டது புதுப்படை! 30 இளம் வல்லுநர்களுக்கு 30 நாள் பயிற்சி!
சென்னை: முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இளம் வல்லுநர்களுக்கு, 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியுடன் கூடிய இரண்டாண்டு புத்தாய்வுத் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் (Anna Administrative Staff College) வகுப்பறை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இது தொடர்பான விவரம் வருமாறு;

தமிழக அரசு
தமிழ்நாடு அரசு தனது அனைத்துத் துறைகளிலும் நல்லாட்சியை வழங்கிட பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு இரண்டாண்டு கால "தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை (2022-2024)" அறிமுகப்படுத்தியுள்ளது. திறன்மிகு இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

வகுப்பறை பயிற்சி
இத்திட்டம், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தை கல்வி பங்காளராக கொண்டு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு, அரசின் உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து சென்னையிலுள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்படும்.

முக்கிய பணிகள்
இளம் வல்லுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, மதிப்பீடு செய்வது, இடையூறுகளை கண்டறிவது மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுப்பதற்கு உதவுவது ஆகியவை அவர்களது முக்கிய பணிகளாகும். இவை, சேவை வழங்கலில் (Service Delivery) ஏதேனும் இடைவெளிகள் இருப்பின் அவற்றினை நிவர்த்தி செய்திடவும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு நிகரான அரசின் சேவைகளை வழங்கிடவும் வழிவகை செய்யும்.

மடிக்கணினி
இப்பணிகளை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு இளம் வல்லுநர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மடிக்கணினிகளை வழங்கி, தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளிலும், நல்லாட்சி வழங்குவதிலும் இளம் வல்லுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி முழுமையான அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மாதம் ரூ.65,000
இப்புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் கலந்து கொள்ளும் இளம் வல்லுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.65,000/- மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான பயணச் செலவு, கைப்பேசி மற்றும் தரவு பயன்பாடு போன்ற செலவினத்திற்காக மாதம் ரூ.10,000/- கூடுதல் தொகையாக வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications