'காவல்துறையை சிறப்பாக வழிநடத்தியவர்'.. தமிழ்நாடு முன்னாள் டிஜிபி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் டிஜிபி ரங்கசாமி இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "முன்னாள் டிஜிபி ரங்கசாமி மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மாநிலக் காவல்துறையைச் சிறப்பாக வழிநடத்திய அவரது திறன் காவல்துறையினரால் என்றென்றும் நினைவுகூரப்படும். ரங்கசாமியின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அதேபோல ஆளுநர் ஆர்.என்.ரவி, "நமது மாநிலத்தின் முன்னாள் டிஜிபி பி.பி.ரங்கசாமி காலமானார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். அவரது தொழில்முறை நேர்மை மற்றும் காவல் பணியில் காட்டிய மனிதாபிமானம் ஆகியவற்றிற்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி" என இரங்கல் தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது டிவிட்டர் பதிவில், "தமிழ்நாடு காவல்துறை முன்னாள் DGP BP.ரங்கசாமி IPS மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். போற்றுதலுக்குரிய பணிகள் பல செய்த ரங்கசாமியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications