கள்ளக்குறிச்சி சூழலால் வருத்தம்.. மக்கள் அமைதி காக்க வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை: கள்ளக்குறிச்சியில் நிலவி வரும் சூழல் வருத்தமளிக்கிறது எனவும், மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த மாணவி சில நாட்களுக்கு முன் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் காவல் துறையினர், மாணவியின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் போராட்டம்
இந்த நிலையில் தனியார் பள்ளி முன் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியின் இறப்பு நீதி கேட்டு கோஷம் எழுப்பினர். அப்போது பள்ளிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவலர்கள் தாக்கியதில், போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

வாகனங்கள் எரிப்பு
இதன்பின்னர் போலீசாரின் வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு, பள்ளி வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கே இருந்த காவலாளி அறையை சூறையாடினர். தொடர்ந்து அங்கே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொழுந்துவிட்டு எரிந்தன.

முதல்வர் வேண்டுகோள்
பள்ளி வளாகமே போர்க்களமாக காட்சியளித்துள்ள நிலையில், மக்கள் அமைதி வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், கள்ளக்குறிச்சியில் நிலவி வரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவி மரணம் தொடர்பாக குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரை கள்ளக்குறிச்சி செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

முக்கிய அலுவலர்கள் பயணம்?
இதனால் விரைவில் கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்ல உஷாவும் கள்ளக்குறிச்சி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications