சீர்காழியை சிதைத்த வடகிழக்கு பருவமழை... முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு!
சென்னை: கனமழையால் கடலூர், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழி புறப்பட்டுச் சென்றார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது.
மழை வந்து மயிலாடுதுறை வாடுதே! இரவு பகலாக வெளுத்து வாங்கும் கனமழை! மூழ்கிய பயிரால் விவசாயிகள் வேதனை!
வரலாறு காணாத மழை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்தது. இதில் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் குறிப்பாக 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை கொட்டி தீர்த்தது.
மின்சாரம் பாதிப்பு
இதனிடையே சீர்காழி அருகேயுள்ள உப்பனாற்றின் கரையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, சூரக்காடு, தென்பாதி, சட்டநாதபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் மழைநீரால் சூழப்பட்டன. திருமுல்லைவாசல்- பழையாறு சாலையில், தொடுவாய் என்ற பகுதியில் பாலம் உள்வாங்கியதால் சாலை துண்டிக்கப்பட்டது. இடி, மின்னல் காரணமாக 10-க்கும் அதிகமான டிரான்ஸ்ஃபார்மர்கள் வெடித்துவிட்டதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதனை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர்.
நிவாரண முகாம்களில் மக்கள்
கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் இதுவரை 32 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மு.க.ஸ்டாலின் ஆய்வு
இந்த நிலையில் சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். அதற்காக நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீழ்காழி புறப்பட்டுச் சென்றார். புதுச்சேரியில் இரவு தங்கிய முதல்வர் ஸ்டாலின் இன்று கடலூர், சிதம்பரம் பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு சீர்காழி செல்ல உள்ளார்.