முதல்வரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்! நாளை துபாய் புறப்படும் ஸ்டாலின்! உதயநிதியும் உடன் செல்கிறார்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் எக்ஸ்போ தொழிற் கண்காட்சியில் கலந்துகொள்ள நாளை ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா 2 வது அலை பரவல், கனமழை, வெள்ளம், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக வெளிமாநில, வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஸ்டாலினின் துபாய் பயணம், முதலமைச்சராக அவர் செல்லும் முதல் வெளிநாட்டு பயணமாகும்.

துபாய் எக்ஸ்போ
கடந்த 2021 அக்டோபர் மாதம் உலகின் பிரம்மாண்ட தொழிற் கண்காட்சியான துபாய் எக்ஸ்போ தொடங்கி மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 192 நாடுகளுக்கு என தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு அதில் தொழில், கலாச்சாரம், பண்பாடு குறித்து உலக நாட்டு முதலீட்டாளர்கள், பொதுமக்களின் கவனம் ஈர்க்கும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டன.

இந்தியாவுக்கான அரங்கம்
இதில் இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் மகாத்மா காந்தியின் உருவத்துடன் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார். இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம், பன்பாட்டை பறைச்சாற்றும் விதமாக நேர்த்தியாக இந்த அரங்கம் அமைக்கப்பட்டது.

துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு
துபாய் எக்ஸ்போனில் இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தமிழ்நாட்டிற்கான அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது. இதன் மூலம், பழம்பெருமை வாய்ந்த தமிழ் மொழி, கலாச்சாரம், சுற்றுலா, தொழிற்துறை குறித்து உலக நாடுகள் மற்றும் முதலீட்டாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்
தமிழ்நாட்டுக்கான அரங்கம் அமைக்கப்பட்டுள்ள துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார். இதற்காக நாளை சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் அவருடன் திமுக இளைஞரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் செல்கிறார்.

வரவேற்க தயாராகும் துபாய் உடன்பிறப்புகள்
முதலமைச்சரான பின்னர் முதல்முறை வெளிநாட்டு சுற்று பயணமாக துபாய் வருகைத்தர இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க துபாய் வாழ் திமுக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக 2 வாரங்களுக்கு முன் திமுக அயலக அணி நிர்வாகியும், வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர் சங்கத்தின் அமீரகத் தலைவருமான மீரான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் துபாய் எக்ஸ்போவை அதற்கு உகந்த களமாக மாற்ற நினைக்கிறார் மு.க.ஸ்டாலின். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட வெளிநாடு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications