ராஜ்பவனில் விவேகானந்தர் சிலை திறப்பு... முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை: சென்னை ராஜ்பவனில் விவேகானந்தர் சிலையை இன்று மாலை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
விவேகானந்தருக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று அவரது சிலையை திறந்து வைத்து அற்புதமாக எடுத்துச் சொன்னார். இந்த சிலை திறப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 1893ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற உலக சர்வ சமய மாநாட்டில் சகோதர சகோதரிகளே என்று ஆரம்பித்து சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரை உலகையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்ற கொள்கையை நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக்கொள்ளவும் செய்கிறோம் என்று நமது நாட்டின் சமய கொள்கைகளை அன்றே எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தரை உலககுக்கு அடையாளம் காட்டிய சிகாகோ மாநாட்டில் பங்கேற்க உதவியது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன். உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள தமக்கு வந்த அழைப்பிதழை, சுவாமி விவேகானந்தருக்கு கொடுத்து பங்கேற்க செய்தவர் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் தான்.
உலக அரங்கில் இந்து மதத்தின் புகழை தன் சொற்பொழிவால் உலகுக்கு பரப்பிய விவேகானந்தர், இலங்கை மார்க்கமாக 1897ம் ஆண்டு பாம்பன் குந்துக்கல் பகுதியில் இறங்கினார். அவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளித்தார் மன்னர் பாஸ்கர சேதுபதி. அப்போது பேசிய விவேகானந்தர், இதுவரை வெளிஉலகம் அறியாத சாதாரண துறவியாக இருந்த என்னை, உலகம் அறிந்த ஞானியாக மாற்றியது மன்னர் பாஸ்கர் சேதுபதி என பாராட்டி மகிழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications