அமைச்சர் சேகர்பாபு ஸ்பெஷல் விமானம் வைத்திருக்கிறாரா? எப்படி அவரால் மட்டும் இப்படி? வியந்த ஸ்டாலின்!
சென்னை: அமைச்சர் சேகர்பாபு ஸ்பெஷல் விமானம் வைத்திருக்கிறாரா? என சந்தேகபடக்கூடிய அளவிற்கு, அவரால் மட்டும் எப்படி இப்படி சுற்றுப்பயணம் செல்ல முடிகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் வியந்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபுவை தாம் புகழ்ந்து பேசுவதால், மற்ற அமைச்சர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் கோபித்துக்கொள்ளக் கூடாது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின், சேகர்பாபுவை இதுவரை இல்லாத அளவுக்கு பாராட்டியுள்ளார். அதன் விவரம் வருமாறு;

செயல் பாபு
''இந்தத் துறையின் அமைச்சர் சேகர்பாபு அவர்களைப் பற்றி நான் பலமுறை பல இடங்களில், பல நிகழ்ச்சிகளில், பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். அவர் ஒரு "செயல் பாபு" என்று ஏற்கனவே நான் பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். அவரும் அதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். நான் உங்களிடையே வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். கோபித்துக்கொள்ளக் கூடாது.''

கோபித்துக் கொள்ளக் கூடாது
''ஒரு முதலமைச்சர் தான் அமைச்சர்களை வேலை வாங்குவார்கள். ஆனால் நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முதலமைச்சரை வேலை வாங்கக்கூடியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். ஏதோ வேலை வாங்குகிறார் என்றால் தேவையில்லாத வேலையில்லை. நாட்டுக்கு பயன்படக்கூடிய வேலை, மக்களுக்கு பயன்படக்கூடிய வேலை.''

என்னை வேலை வாங்குகிறார்
''ஆக அப்படிப்பட்ட ஒரு சிறப்புக்குரிய துறையை பொறுப்பேற்றுக்கொண்டு அவர் பல்வேறு பணிகளை, பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை, இதுவரையில் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில் இந்து சமய அறநிலையத் துறைக்கு இப்படிப்பட்ட சாதனை எங்கேயாவது நடந்திருக்கிறதா? என்று கேட்டால், தைரியாமாக, தெம்பாக சொல்லலாம், இல்லை தமிழ்நாட்டில் மட்டும் தான் நம்முடைய சேகர்பாபு வைத்துக் கொண்டிருக்கக்கூடிய அந்தத் துறைதான் அது ஆற்றிக் கொண்டிருக்கிறது என்று கம்பீரமாக நம்மால் சொல்லமுடியும்.''

ஸ்பெஷல் விமானம்
''கோயில் சீரமைப்புப் பணிகளை இதுவரை இல்லாத அளவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அமைச்சர் ஒவ்வொரு கோயிலுக்கும் நேரடியாக போய்க்கொண்டிருக்கிறார். எப்படி போகிறார்? விமானத்தில் போனால்கூட இவ்வளவு வேகமாக போக முடியாது. அவர் இதற்காக ஸ்பெஷலாக விமானம் வைத்திருக்கிறாரா? என்று சந்தேகபடக்கூடிய அளவிற்கு, ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு, அதிசயப்படக்கூடிய அளவிற்கு மூன்று மணிக்கு விடியற்காலையில் எங்கேயாவது இருக்கிறார். இங்கே ஆறு மணிக்கு சென்னையில் வந்திருக்கிறார்.''

அலுப்பில்லாமல் -சலிப்பில்லாமல்
''ஆக அலுப்பில்லாமல், சலிப்பில்லாமல், அவர் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய பொறுப்பை நம்முடைய அரசுக்கு பெருமை தேடித் தரக்கூடிய வகையில் அவர் ஆற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காக நான் அரசின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வாழ்த்தை, பாராட்டுக்களை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.''












Click it and Unblock the Notifications