“பாதயாத்திரை இல்லை; பாவ யாத்திரை.. ” ஸ்டாலின் முதல் சீமான் வரை.. கிளம்பிய எதிர்ப்புகள்
சென்னை: தமிழக பாஜக தலைவர் தொடங்கி உள்ளது பாதயாத்திரை இல்லை; அது பாவ யாத்திரை என்று பதிலடி கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரைப் போலவே சில தலைவர்கள் மிகக் கடுமையாக இந்த யாத்திரையை விமர்சித்திருக்கிறார்கள்.
யார் யார் என்ன சொன்னார்கள்?

முதலமைச்சர் ஸ்டாலின்: இன்று நடைபெற்றுவரும் திமுக இளைஞர் அணி புதிய அமைப்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக பாஜக தொடங்கியுள்ள பாத யாத்திரை பற்றி தனது விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார்.
அப்போது அவர், "நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. ஆகவே இதைப்போல ஒன்றிய அமைச்சர்கள் அடிக்கடி தமிழ்நாட்டு வருவார்கள். ஒன்றிய அரசின் புதிய திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழ்நாட்டு அமித்ஷா வந்தாரா? அல்லது ஏற்கெனவே அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்கிவைக்க வந்தாரா? இல்லை.

ஏதோ பாத யாத்திரையைத் தொடங்கிவைக்க வந்திருக்கிறார். அது பாதயாத்திரை அல்ல. குஜராத்தில் 2002ஆம் ஆண்டும் இப்போது மணிப்பூரிலே நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களுக்கு மன்னிப்புக் கேட்கின்ற பாவ யாத்திரை.
இந்தநாட்டின் உள்துறை அமைச்சர் அவர். நான் கேட்கிறேன், இந்த 2 மாதங்களாகப் பற்றி எரியும் மணிப்பூருக்குப் போய் அமைதி யாத்திரை நடத்த முடிந்ததா? முடியவில்லையே. அமைதியாக இருக்கின்ற தமிழ்நாட்டில் கலவரங்கள் ஏற்படாத என்று பாத யாத்திரை தொடங்கி வைக்க வந்திருக்கிறார் அவர்.

நேற்று பேசியபோது அமித்ஷா, திமுக குடும்பக் கட்சி என்று சொல்லி இருக்கிறார். கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன்ற ஒன்று. நானும் எத்தனை முறையோ சொல்லிவிட்டேன். எதையாவது புதியதாக மாற்றிச் சொல்லுங்கள் என்று.
பாஜகவில் வாரிசுகள் யாரும் பதவியில் இல்லையா? நான் சொன்னால், நாளைக்கே பதவி விலகிவிடுவார்களா? பாஜகவில் மாநிலம் வாரியாக பதவியில் இருக்கும் வாரிசுகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணிநேரம் ஆகும்" என்று மிகக் கடுமையாகச் சாடினார்.

திமுக அமைச்சர் எ.வ,வேலு: "ஏற்கெனவே தமிழக பாஜகவின் தலைவராக முருகன் இருந்தார். அவர் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வேல் யாத்திரை போனார். அதற்கு என்ன ரிசல்ட் கிடைத்தது என்று தமிழக மக்களுக்குத் தெரியும். இப்போது அண்ணாமலை தலைமை ஏற்ற பிறகு அவர் யாத்திரை போகிறார். அதற்கான விடை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்பாக தெரியும்.
இவர்களைப் பார்த்து எல்லாம் நாங்கள் அஞ்சப் போவதில்லை. தமிழர்கள் இவர்களை அறிவார்கள். இவர்களின் கதை எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது. தமிழர்களுக்கு எது தேவையோ அதைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாகச் செய்து வருகிறார். வருகின்ற தேர்தலில் திமுக 40க்கு 40 இடங்களில் வெற்றி பெரும். அது உறுதி" என்கிறார்

பழ.கருப்பையா: "யாருடைய ஊழலுக்கு எதிராக அண்ணாமலை பாத யாத்திரை போகிறார்? கர்நாடகாவில் ஏற்கெனவே பாஜக செய்த ஊழலுக்கு எதிராகவா? பாஜக ஊழல் இல்லாமல் ஆட்சி செய்துவிட்டு, அடுத்தவர்களின் ஊழலைப் பற்றிச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
ஊழலின் வடிவிலக்கணம் கர்நாடக பாஜகதான். பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிறையிலேயே பல காலம் வாழ்ந்தவர். அவர்களுடைய ஊழல் ஏற்கத்தக்கதா? இந்த யாத்திரை எல்லாம் நடத்தி தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை ஒருகாலத்திலும் பாஜக பெற முடியாது.
பாஜகவே ஒரு தூய்மையான கட்சி இல்லை. அது ஒரு வகுப்புவாதக் கட்சி. தமிழ்நாட்டு மன உணர்வுகளுக்கு மாறான கட்சி. அது ஒரு கட்சியும் இல்லை. அவர்களுக்கு ஒரு கொள்கையும் இல்லை. பேசுவது என்றால் ஆயிரம் பேசுவார்கள்" என்கிறார்

பத்திரிகையாளர் அய்யநாதன்: "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்று பாத யாத்திரை செல்கிறார். அவர் சொல்லும் என் மண் என்பது தமிழ்நாடு. அவர் சொல்லும் என் மக்கள் என்பது தமிழர்கள்.
அப்படி என்றால் கடந்த 9 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள பாஜக இதுவரை தமிழர்களுக்குச் செய்தது என்ன? என்ன அடிப்படையில் மக்கள் இவரை வரவேற்கப் போகிறார்கள்? இதனால் அண்ணாமலையின் மதிப்பு என்ன உயரப் போகிறது.
ஆளும் கட்சியாக இருந்து ஏதாவது இந்த மாநிலத்திற்குச் செய்து இருந்தால், மக்கள் வரவேற்பார்கள். அப்படி ஒன்றையும் இவர் செய்யவில்லை. அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை" என்கிறார்

நாம் தமிழர் கட்சி சீமான்: "அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது சிபிஐ ஊழல் வழக்கே இருக்கிறது. ஏன் அவர்களின் ஊழல் பட்டியலை எல்லாம் அண்ணாமலை வெளியிடவில்லை? ஒரு நேர்மையாளர் என்றால், அவர் அதிமுக ஆட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் இல்லையா?
அதிமுக ஊழலை மறைத்துவிட்டு, வேறு பட்டியலை வெளியிடுகிறார். திமுகவிற்கு முன்னாள் ஆட்சியிலிருந்தது அதிமுகதானே? அதை மறைத்துவிட்டு, அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறது பாஜக.
இதன் மூலம் அதிமுகவுக்கு ஒரு புனித பட்டம் கட்டப் பார்க்கிறார் அண்ணாமலை. அவர்களை எல்லாம் நேர்மையாளராகக் காட்ட முயல்கிறார் அண்ணாமலை.
ஆகவே இந்த நடைப்பயணத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அண்ணாமலை வேண்டும் என்றால் உடலைக் கொஞ்சம் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவலாம். நடப்பதால் சர்க்கரை குறையும். தினமும் உடற்பயிற்சி செய்ததை மாதிரியும் இருக்கும். இது எல்லாம் ரொம்ப பழைய மாடல் இது.

பத்து ஆண்டுகள் நாட்டை ஆளக்கொடுத்தோம். நாட்டையே பிச்சைக்கார நாடாக மாற்றிவிட்டீர்கள். பிறகு நடந்து என்ன பயன்வரை போகிறது சொல்லுங்கள்?
பாஜக அதிபர் ஆட்சியை நோக்கி நகர்கிறது. ஆகவே ஜனநாயக கட்சிகள் எதுவுமே இருக்கக் கூடாது. அனைத்தையும் ஒழித்துவிட வேண்டும் எனத் திட்டம் போடுகிறார்கள். ஒற்றைக் கட்சி ஆட்சி முறையைக் கொண்டுவரவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை.

இவர்கள் இப்போது கொண்டுவர முயற்சிக்கும் பொது சிவில் சட்டம் என்பதே மனுதர்மத்தின் இன்னொரு வடிவம்தான். அம்பேத்கர் கொண்டுவந்த சட்டத்தைத் தள்ளிவிட்டு, இவர்கள் ஒரு சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்" என்கிறார்












Click it and Unblock the Notifications