அமைச்சர்களும் அதிகாரிகளும் நேர்கோட்டில் செயல்பட்டால்.. நம்பர் 1 இலக்கை தமிழகம் அடையும் -முதல்வர்
சென்னை: அமைச்சர்களும் அதிகாரிகளும் நேர்கோட்டில் செயல்பட்டால் நம்பர் 1 இலக்கை தமிழகம் அடையும் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் 4 மணி நேரமாக நடைபெற்ற அரசுத் துறை செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் போது இதனைக் கூறியிருக்கிறார்.
மேலும், இது தொடர்பாக முதல்வர் பேசியதாவது;
ஜெர்மனியிலிருந்து திரும்பிய ராஜாத்தி அம்மாள்! குடும்பத்துடன் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
அமைச்சர்கள்
அமைச்சர்களுக்கும் துறை அதிகாரிகளுக்குமான ஒருங்கிணைந்த செயல்பாடு கூட சில துறைகளில், சில நேரங்களில் ஏற்படாமல் இருப்பதாகவும் நான் அறிகிறேன். இது எங்கும், எப்போதும், எந்தத் துறையிலும் எந்த சூழலிலும் ஏற்படக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.மக்களுக்கும், ஆட்சி நிர்வாகத்துக்குமான தொடர்பும், அவர்களது அனுபவங்களும், அனைவராலும் மதிக்க வேண்டியது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
ஒருங்கிணைப்பு
அதேபோல் மாவட்ட நிர்வாகத்துக்கும், துறைச் செயலாளர்களுக்குமான ஒருங்கிணைப்பும், ஒருங்கிணைந்த செயல்பாடும் நிச்சயம் அவசியம் ஆகும்.ஆட்சியில் இருப்பவர் இடும் கட்டளையைச் செயல்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், மக்கள் நலன் கருதி நீங்கள் வைத்துள்ள, உங்களது கனவுத் திட்டங்களையும், அரசுக்குச் சொல்லி, அதனையும் செயல்படுத்த நீங்கள் முனைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
எச்சரிக்கை
முதலமைச்சருடைய தகவல் பலகை (CM Dash Board) என்பது தரவுகளைக் கொண்டு முடிவுகளை மேற்கொள்ளும் நவீன நல் ஆளுமைக்கான வழிமுறைகளை உலக அளவில் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு துறையும், தங்கள் துறை சார்ந்த தரவுகளை பதிவேற்றம் செய்யுமாறு ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் சில துறைகள் முதலமைச்சரின் தகவல் பலகையில் தரவுகளை பதிவு செய்வதில் முனைப்புக் காட்டவில்லை என்பது என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இத்தகைய போக்கைத் தவிர்த்து, நல் ஆளுமையை இந்த அரசு வழங்குவதற்கு அனைத்துத் துறைகளும், தரவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
நேரடி தொடர்பு
சிறப்பான நிர்வாகத்தை அளிப்பது இந்த அரசினுடைய முக்கிய நோக்கம். அந்த வகையில், இளம் வல்லுநர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தாய்ப்புத் திட்டம் (Tamil Nadu Chief Minister's Fellowship Programme) என்ற உன்னதமான ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 30 இளம் வல்லுநர்கள், மூன்று கட்ட தேர்வுக்குப் பின்னர் இந்தத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அரசு நிர்வாகத்தைச் சிறப்பாக செம்மைப்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும். அவர்கள் நேரிடையாக, முதலமைச்சர் அலுவலகத்தோடு தொடர்பில் இருப்பார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்கும் ஒரே கோட்டில்
அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகிய நான்கும் ஒரே நேர்கோட்டில் செயல்பட்டால், நேர்கோட்டில் சென்றால், தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் நம்பர் ஒன் என்ற இலக்கை நிச்சயமாக அடையமுடியும். எனவே, இதற்காக நீங்கள் உங்கள் பணியை நிறைவேற்றித் தர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை எடுத்துச் சொன்ன உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.