“தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்”.. வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை: தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் வணிகர்கள் தங்கள் கடை பெயர் பலகைகளை தமிழ் மொழியில் வைக்க முன்வரவேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 40,944 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "கலைஞர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களது இன்னல்களை குறைக்கவும் 1989ல் நல வாரியம் உருவானது.
கருணாநிதி இந்த வாரியத்தை தொடங்கிய போது முதலில் அலுவலர் உறுப்பினர்களாக 20 பேர் இருந்தார்கள். வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போது 30ஆக உயர்த்தி உள்ளோம். 40,944 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளனர்.
தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம் தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திற்கு பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 88,219 ஆக உயர்ந்துள்ளது. வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரித்துள்ளது.
வணிகர் நல வாரியத்தின் மூலம் வணிகர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வணிகர்களுக்காக ரூ .3.29 கோடி நிதி வழங்கியுள்ளோம். நலிவுற்ற வணிகர்களுக்கு பெட்டிக்கடை அல்லது 3 சக்கர வாகனம் வழங்க ரூ.10,000 வழங்கப்படுகிறது. தீ விபத்து, இதயநோய் மற்றும் புற்றுநோய் சிகிச்சைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளின் குத்தகை காலம் உயர்த்தப்படும். நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளுக்கான குத்தகை காலம் 12 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளின் குத்தகை காலம் உயர்த்தப்படும். வணிகர் நலவாரிய உறுப்பினர்கள் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 390 குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதய அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சை பெற்று மருத்துவ காப்பீடு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. பெண் உறுப்பினர்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. வணிகம் அமைதியாக நடத்தும் வகையில் அமைதி மிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
வணிகத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தீ விபத்து மற்றும் இதயநோய், புற்றுநோய் சிகிச்சைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது." எனத் தெரிவித்தார்.
மேலும், சேவை மனப்பான்மையோடு வணிகர்கள் செயல்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் வணிகர்கள் தங்கள் கடை குறித்த பெயர் பலகைகளை தமிழ் மொழியில் வைக்க முன்வரவேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
மேலும், சிறு வணிகர்களும் வணிக நிறுவனங்களும் நிதி வளர்ச்சிக்கு மட்டுமல்ல மனித வளர்ச்சிக்கும் அடிப்படையானவை. வணிகர்களின் கோரிக்கையை எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம். நமக்கு இடையில் இடைத்தரகர்கள் கிடையாது, அவை இருக்கவும் கூடாது. வர்த்தகமாக இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். வணிகர்களின் கோரிக்கைகளை தெரிவித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது" என ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications