போகாத சொந்தம் திரும்பி வராது! அதை போல் தான் இதுவும்! ஆய்வில் நச் அறிவுரை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: கேட்காத கடனும் திரும்ப வராது -போகாத சொந்தமும் திரும்பி வராது என்ற பழமொழிக்கு ஏற்ப ஆய்வுக்கு உட்படுத்தாத எந்தத் திட்டமும் முறையாக செயல்படாது என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ் செய்தார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25,000 கோடி வங்கிகள் மூலம் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற DISHA கமிட்டி ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;
“கருணாநிதி கதை வசனம் எழுதி சம்பாதித்த பணத்தை என்ன செய்தார் தெரியுமா?” - ஸ்டாலின் சொன்ன தகவல்!
எல்லோருக்கும் எல்லாம்
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே நம்முடைய அரசினுடைய நோக்கமாக இருக்கிறது. எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், எல்லாத் துறைகளும் ஒன்று போல முன்னேற்றம் காண வேண்டும். மருத்துவம், கல்வி, இளைஞர் நலன், வேளாண் மேலாண்மை, பெருந்தொழில்கள், நடுத்தர - சிறு -குறு தொழில்கள், நெசவாளர் மற்றும் மீனவர் நலன் என சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான தேவைகளை அறிந்து திட்டங்களை வகுத்து மாநில அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசின் திட்டங்கள்
கோட்டையில் தீட்டப்படக்கூடிய திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்று சேர, சீரான ஒரு ஒருங்கிணைப்பு அவசியம் தேவை. திட்டங்கள் தீட்டுவதை விட முக்கியமானது அந்தத் திட்டங்கள், அதனுடைய பயன்கள், அதனுடைய நோக்கம் சிதையாமல் நிறைவேற்றுவதுதான்.அதுதான் நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. அந்தச் சவாலை எதிர்கொள்வதற்காகத்தான் இது போன்ற ஆலோசனைக் குழுக்கள் அவசியமாகிறது.
100 நாள் வேலை
கிராமப்புற குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதை உறுதி செய்து, தனிநபர் மற்றும் ஊரக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தினுடைய நோக்கம். 2021-22ஆம் ஆண்டில் 80 இலட்சம் பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, 34 கோடி மனித வேலை சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சுய உதவிக் குழுக்கள்
ஏழை, எளிய மகளிரைக் கொண்டு சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு நிதி உள்ளிட்ட சேவைகளை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, குடும்ப வருமானத்தை உயர்த்தும் உயர்ந்த நோக்கத்துடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. 2021-2022 ஆம் ஆண்டில் மட்டும் புதியதாக 32ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கி அதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
வங்கிக்கடன்
36 ஆயிரத்து 957 புதிய சுய உதவிக் குழுக்களை உருவாக்கி இருக்கிறோம். 20 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க திட்டமிட்டு 21 ஆயிரத்து 392 கோடியே 52 லட்சம் ரூபாய் வங்கிக்கடன் வழங்கப்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் கோடி வங்கிகளின் மூலம் கடன் வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறோம்.
குடிநீர் இணைப்பு
இல்லம்தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த அரசால் 'ஜல் ஜீவன்' இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2021-22ம்ஆண்டில் ரூபாய் 1,156 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 14 லட்சத்து 54 ஆயிரத்து 569 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு
இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறக்கூடிய வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2021-2022-ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 634 இளைஞர்களுக்கு ரூபாய் 49 கோடியே 25 லட்சம் செலவில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு பெற தகுதியுடையவர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
போகாத சொந்தம்
இந்தத் திட்டங்கள் மட்டுமல்ல - எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனுடைய நிறை - குறைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அப்படிச் செய்து வந்தாலே, அந்தத் திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறி விடும்."கேட்காத கடனும் திரும்ப வராது -போகாத சொந்தமும் திரும்பி வராது" என்று கிராமத்தில் சொல்வார்கள்.
அதிகாரிகளுக்கு அறிவுரை
அதைப் போலத்தான் ஆய்வுக்கு உட்படுத்தாத எந்தத் திட்டமும் முறையாக செயல்படாது. இதனை துறைத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். இது போன்ற ஆய்வுக் கூட்டங்களின் மூலமாக ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நிலையான வளர்ச்சியையும், சமூகநீதியையும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அனைவருக்கும் உறுதி செய்வோம்.