மஸ்தானை என்னால் மறக்கவே முடியவில்லை! திமுக இஃப்தார் விழாவில் துயரத்தை பகிர்ந்த ஸ்டாலின்!
சென்னை: திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளராக இருந்து மறைந்த டாக்டர் மஸ்தானை தன்னால் மறக்கவே முடியவில்லை என இப்தார் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
காரணம் அந்தளவுக்கு ஸ்டாலினின் குட்புக்கில் டாக்டர் மஸ்தான் இடம்பெற்றிருந்தார். 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது ராயபுரம் தொகுதியை எதிர்பார்த்தார் டாக்டர் மஸ்தான்.

அதேபோல் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனக்கு தலைமை வாய்ப்பு கொடுக்கும் என எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை.
அதேபோல் 2021 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் தனக்கு வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்த்த டாக்டர் மஸ்தானுக்கு அதுவும் ஏமாற்றமாகவே அமைந்தது.
இருப்பினும் இது குறித்த வருத்தத்தை சிறிதும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் அண்ணா அறிவாயலயத்துக்கு தினமும் சென்றதோடு திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் என்ற முறையில் அந்த அணியின் செயல்பாடுகளை ஆக்டிவாக வைத்துக் கொண்டார்.
வேறு யாருமாக இருந்திருந்தால் நமக்கே சீட் கொடுக்கவில்லை நாம் ஏன் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்சி வேலைகளில் ஆர்வம் காட்டாமல் இருந்திருப்பார்கள். ஆனால் மஸ்தான் அது போல் நடந்துகொள்ளாததால் மறைந்தும் ஸ்டாலின் மனதில் வாழ்கிறார்.
குறிப்பாக ஆண்டுதோறும் பல லட்சங்கள் செலவழித்து இவர் நடத்திய இப்தார் விழா இன்றளவும் பேசப்படுகிறது. இதனிடையே சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக இப்தார் விழாவில் மஸ்தான் பற்றி ஸ்டாலின் பேசியதாவது;
''இந்த நேரத்தில் நான் மறைந்த நம்முடைய நண்பர் மஸ்தான் அவர்களின் முகம்தான் என்னுடைய நினைவுக்கு வருகிறது! என்னால் அவரை மறக்கவே முடியவில்லை!
கழகத்துக்காகவும், இசுலாமிய பெருமக்களுக்காகவும் இரவு பகல் பாராமல் உழைத்தவர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கழகத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் உழைத்தவர் மட்டுமல்ல, இதுபோன்ற விழாக்களை அவரே முன்னின்று நடத்தியிருக்கிறார், அந்த நிகழ்ச்சிகளில் நானும் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை பெற்று இருக்கிறேன்.
அவரை அநியாயமாக நாம் இழந்துவிட்டோம். அவர் இருந்திருந்தால் எப்படி நடத்துவாரோ அதேபோல் மிகப் பிரம்மாண்டமாக நம்முடைய துறைமுகம் காஜா அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.''












Click it and Unblock the Notifications