பணம் கொடுக்கல் வாங்கல் புகார்கள்.. டிஜிபிக்கு தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்
சென்னை: பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான புகார்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என, காவல் துறையினருக்கு அறிவுறுத்தும்படி, காவல்துறை டி.ஜி.பி.க்கு தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியிருக்கிறார்.
நிலம் விற்பதாகக் கூறி, 28 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன் ஜாமீன் கோரி குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பான உரிமையியல் விவகாரம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 420-வது பிரிவின் கீழ் மோசடி குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க அறிவுறுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டி, டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டிருந்தது.
இது சம்பந்தமாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கண்காணிப்பு குழுவை அமைக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட மதுரைக் கிளை, இதற்கு உதவியாக செயல்பட தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் அறிவுறுத்தியிருந்தது.

இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான உரிமையியல் பிரச்னைகளில் மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்கும்படி, காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என டி.ஜி.பி.க்கு தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், மோசடி வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகவும், அதனால் மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் போது விழிப்புடன் இருக்கும்படி காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் டி.ஜி.பி.யை தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications