ரூ.2.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு: வழிப்பறி என தாய் ஆடிய நாடகம் அம்பலம்: 2 பெண்கள் கைது
சென்னையில் வறுமையின் காரணமாக ரூ.2.5 லட்சத்துக்கு குழந்தையை விற்ற தாய் பின்னர் பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக பொய்ப்புகார் அளித்ததில் உண்மை வெளிச்சத்துக்கு வந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டு, 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தையை வாங்கிய தம்பதியிடம் விசாரணை நடக்கிறது.

மனைவியைப் பிரிந்த கணவன்
சென்னை புழல் காவாங்கரையை கே எஸ் நகர் 6 வது தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி யாஸ்மின். கடந்த 11 வருடத்திற்கு முன்பு திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் இரண்டாவதாக குழந்தை உண்டாகியுள்ளார். 5 மாத கற்பமாக இருந்த யாஸ்மினை விட்டு கணவர் மோகன் பிரிந்து சென்றுள்ளார்.

இரண்டாவது உருவாகிய கரு, குழந்தைப் பெறுவதில் சிரமம்
குழப்பத்தில் இருந்த யாஸ்மின், தான் ஆஸ்துமா சிகிச்சைக்காக அடிக்கடி செல்லும் தனியார் மருத்துவமனையில் பழக்கமான எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஜெயகீதா (49) என்பவரிடம் குழந்தையை கலைக்க முடியுமா என ஆலோசனை கேட்டுள்ளார். யாஸ்மினின் கதையைக் கேட்ட ஜெயகீதா 5 மாத கருவை கலைத்தால் உயிருக்கே ஆபத்து, வயிற்றில் உள்ள குழந்தையை பெற்றெடு, நான் அந்தக்குழந்தையை குழந்தை இல்லா தம்பதியிடம் அதிக விலைக்கு விற்றுத்தருகிறேன், உன் குழந்தையும் நன்றாக வாழும், உனக்கும் கஷ்டத்துக்கு பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

2.5 லட்ச ரூபாய்க்கு குழந்தை விற்பனை
மறுநாள் (25.11) யாஸ்மின் பிறந்து 5 நாட்கள் ஆன ஆண் குழந்தை மற்றும் 10 வயது மகள் மற்றும் ஜெயகீதா ஆகியோருடன் மதியம் 12.30 மணியளவில் வேப்பேரி காவல் நிலையத்திற்குட்பட்ட புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சரவணா ஸ்டோர் அருகில் வந்துள்ளார். அங்கு அவருக்கு தெரிந்த எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தனம் என்பவர் ஒரு தம்பதியை அழைத்து வந்துள்ளார். அவர்கள் ஸ்டாம்ப் பேப்பரில் சாட்சிக் கையெழுத்துடன் தாய் யாஸ்மினிடம் கையெழுத்தை பெற்று கவரில் பணத்தைப் போட்டு கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கிக்கொண்டுச் சென்றுள்ளனர்.

பணம் வழிப்பறி என புகார்
இந்நிலையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை பணத்திற்கு விற்ற யாஸ்மின் 3 வழக்கறிஞர்களுடன் வேப்பேரி காவல் நிலையம் வந்து தனது குழந்தையை தனம் என்பவருடன் வந்த இரண்டு நபர்கள் தன்னிடம் இருந்து ஏமாற்றி வாங்கி சென்று விட்டதாகவும், குழந்தையை மீட்டு தரும்படி கடந்த 27 ஆம் தேதி இரவு புகார் அளித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன போலீஸர் வழக்குப்பதிவு செய்து உடனடியாக புகார் தொடர்பாக விசாரணை இறங்கினர்.
யாஸ்மின் புகாரில் கூறியிருந்த இடைத்தரகராக செயல்பட்ட ஜெயகீதா, தனம், லதா, ஆரோக்கிய மேரி ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை செய்ததில் குழந்தை சென்னை மூல கொத்தளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் சென்ற போலீஸார் குழந்தையை மீட்டனர்.

குழந்தை விற்பனை அம்பலம் புரோக்கர் பெண்கள் சிக்கினர்
பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சிவக்குமார் அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகிய இருவரும் தான் குழந்தையை வாங்கிய தம்பதி என்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய ஸ்ரீதேவி மூலகொத்தளத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் குழந்தையுடன் தங்கி இருந்துள்ளது தெரியவந்தது.

வழிப்பறி புகார் போலி, நாடகம் என அம்பலம்
இதில் போலீஸாருக்கு அதிர்ச்சியூட்டிய விஷயம் யாஸ்மீனிடம் பணம் வழிப்பறி செய்யப்படவில்லை, யாஸ்மின் புகார் பொய்யாக புனையப்பட்டது என்று தெரியவந்தது. யாஸ்மின் பயணித்த ஆட்டோ எண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்து அதன் டிரைவரை கண்டு பிடித்து போலீஸார் விசாரித்ததில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், வீட்டில் அவரை பத்திரமாக கொண்டு இறக்கிவிட்டதாகவும், அவர் தனக்கு மீட்டர் காசு ரூ.110-ஐ கொடுத்து சவாரியை முடித்து அனுப்பி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
போலீஸார் விசாரணை தீவிரமடையும் நிலையில் ஜெகன் என்பவர் தனது மனைவி சந்தியாவுடன் காவல் நிலையத்தில் தாமாகவே ஆஜராகி தான் தொலைக்காட்சிகளில் குழந்தை விற்கப்பட்ட செய்தி பார்த்ததாகவும், அது குறித்து யாஸ்மின் புகார் கொடுத்ததாகவும், அதில் பணத்தை யாரோ கொள்ளை அடித்து சென்றதாக யாஸ்மின் கூறி உள்ளார், ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் அந்தப் பணம் தன்னிடம் தான் இருந்தது என்றும் பணம் பறிபோனதாக புகார் அளித்த யாஸ்மின் தான் தன்னை தொலைபேசியில் அழைத்து ஜீவா பார்க் அருகே வரவழைத்து பணத்தை கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லி மறுநாள் மாதாவரம் அருகே வரவழைத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் இந்த தகவலை தெரிவிக்கவே காவல் நிலையம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

2 பெண்கள் கைது 3 பேரிடம் விசாரணை
இதனால் கடுப்பான போலீஸார் எங்கள் நேரத்தை விரையம் செய்கிறாயா என யாஸ்மினிடம் விசாரணை நடத்த, பயந்துப்போன யாஸ்மின் தனது குழந்தையை திரும்ப மீட்கவே தான் அப்படியெல்லாம் நாடகம் ஆடியதாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில் யாஸ்மின் மற்றும் குழந்தையை அமைந்தகரையில் உள்ள சுரபி காப்பகத்தில் போலீஸார் தங்க வைத்தனர். இதில் புரோக்கர்களாக செயல்பட்ட தனம் மற்றும் ஜெயகீதாவை கைது செய்தனர். இப்புகார் சம்பந்தமாக குழந்தையை விலைக்கு வாங்கிய சிவகுமார், ஆட்டோ டிரைவர் செய்யது தஸ்தகீர், ஜெகன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை தத்து கொடுக்கும் முறை
குழந்தையை தத்துக்கொடுக்க, தத்து எடுக்க அரசாங்கம் பல நடைமுறைகளை வைத்துள்ளது. குழந்தையை வளர்க்க முடியாதவர்கள் அரசு காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க தொட்டில் குழந்தை திட்டம் உள்ளது, அல்லது பிரசவம் நடந்த மருத்துவமனையில் தான்னால் குழந்தையை வளர்க்க இயலாது என்றால் அவர்களே குழந்தையை அரசிடம் ஒப்படைப்பார்கள்.

குழந்தை விற்பனைக்கு அலையும் கும்பல்
குழந்தைகளை விற்பனை செய்யும் கும்பல் பெரிய அளவில் இயங்கி வருகிறது. இதற்கென்றே இவர்கள் ஆதரவற்ற, வறுமையில் உள்ள, கணவனால் கைவிடப்பட்ட அல்லது 2 பெண் குழந்தைகள் இருந்து 3 வதும் பெண் குழந்தை பெறும் பெண்களை குறிவைத்து அரசு மருத்துவமனைகளில் சுற்றி வருகின்றனர். இவர்கள் ஒருபெண் கர்ப்பக்கால பரிசோதனைக்கு வரும்போதே இனங்கண்டு மனதை மாற்றும் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர் என்கின்றனர் போலீஸார்.












Click it and Unblock the Notifications