மாற வேண்டியது "சின்னத்தம்பி" இல்லை .. சின்ன மனசு கொண்ட மனிதர்கள்தான்!
சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் முடிவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
Recommended Video

சென்னை: சின்னதம்பியை கும்பியாக மாற்றப்படுவது சரியா? சின்னதம்பியின் இந்த நிலைமைக்கு யார் காரணம்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து செல்கின்றன.
நாளை சின்னதம்பியின் அட்டகாசம் அதிகமானால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும், அதனால் சின்னதம்பியை கும்கியாக மாற்றுவதே நல்லது என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது.
சின்னதம்பி விளைநிலங்களை சேதப்படுத்திவிட்டான், ஊருக்குள் மக்களை அச்சுறுத்துகிறான், என்று புகார்களாக அன்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மக்களின் பாதுகாப்பை உணர்ந்து வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு கொண்டு போனால், அதற்கு கண்ணீர்விட்டு பிரியாவிடை கொடுத்தது ஏனோ?

தந்தம் உடைந்தது
"சின்னதம்பியே திரும்பி வா" என்று மீம்ஸ்களை தெறிக்க விட்டது யாரோ? அப்போதெல்லாம் ஆசையாக கண்ணுக்கு தெரிந்த சின்னதம்பி, திரும்பி வந்த மறுநாளே வேண்டாதவனாகி விட்டானா? லாரியில் ஏற்றும்போதே அளவுக்கு அதிகமான வலிகளை பெற்றுவிட்டான் சின்னதம்பி. தந்தங்கள் உடைந்து, 4 கும்கிகள் குத்தியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டு ரத்தங்கள் தெறித்து மண்ணில் விழுந்தன.

நடந்தே வந்தது
டாப்சிலிப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகும், சின்னதம்பியை கண்கலங்கி பசியுடன் ஆவலுடன் ஊருக்குள் தேடி திரிந்த தாய் யானை, குட்டியானையின் பாசத்துடிப்பை யார் அறிவார்கள்? 3 நாட்களில் 100 கிலோ மீட்டருக்கு சின்னதம்பி நடந்தே வந்திருக்கும் வலியும், வலிக்கு பின்னால் இருக்கும் உணர்வையும் யாரால் புரிந்து கொள்ள முடியும்?

மயங்கி விழுந்தது
பசியை ஒருக்காலும் பொறுத்து கொள்ள முடியாத ஒருவிலங்கு, சுற்றித்திரிந்து, ஆகாரமின்றி மயங்கி விழுந்ததின் அர்த்தத்தை யார் புரிந்துகொள்வது? உறவை தேடி ஊருக்குள் நடந்தே வந்து, அதில் தோல்வியும் அடைந்து பசியால் மயங்கியும் விழுந்து, கடைசியில் கும்கியாக மாற்றப்படுவது சரிதானா?

பசுமை புரட்சி
அப்படியானால் மக்கள் மீது ஒரு தவறும் இல்லையா? எல்லை மீறிய பேராசை காரணமாக வன எல்லைகளை கூட விட்டு வைக்காததை யாரும் யோசிக்காதது ஏனோ? விவசாய புரட்சி, பசுமைப்புரட்சி, வன விலங்கு பாதுகாப்பு என எத்தனையோ வார்த்தை பிரயோகங்கள் அத்தனையும் நூற்றாண்டை கடந்தும் வீணாகி விட்டதா? ஒரு புரிதலும் இதுவரை மக்களுக்கு இவைகள் மீது ஏற்படவில்லையா?

தொல்லை தந்தவர்கள்
யானைகளின் இருப்பிடத்தைக்கூட ஆக்கிரமித்த மனிதர்களை யார் குற்றம் சொல்வது? உணவை தேடி, உறவை தேடி ஊருக்குள் வந்த சின்னதம்பியை குற்றம் சொல்வது சரிதானா? உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்று கும்கியாக மாற்றிவிடுகிறோம், சரி... ஆனால் யானைக்கு தொல்லை தந்த மனிதர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? சின்னதம்பி ஊருக்குள் வந்த காரணம்தான் என்ன?

சின்ன மனசுக்காரர்கள்
நாளை சின்னதம்பி போன்றே வேறு யானைகள் ஊருக்குள் வந்தால் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்னென்ன? உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்ற உணர்வு வரும்வரை சின்னதம்பிகள் ஊருக்குள் வரத்தான் செய்வார்கள். இந்த உண்மை மனிதர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, சின்னதம்பிகளுக்கு நன்றாகவே புரியும். எனவே மாற்ற வேண்டியது சின்னதம்பிகள் இல்லை.. சின்ன மனசுக்காரர்கள்தான்!












Click it and Unblock the Notifications